Published : 13 Dec 2018 08:33 PM
Last Updated : 13 Dec 2018 08:33 PM

தெலங்கானாவில் சிக்கிய ‘விஞ்ஞான’ திருடர்கள்; சென்னை அழைத்து வரப்பட்டனர்: கோடிக்கணக்கில் நடத்தப்பட்ட திருட்டுகளில் துப்பு துலங்குகிறது

கூகுள் மேப் மூலம் அப்போலோ மருத்துவர் உள்ளிட்ட செல்வந்தர்வர்கள் வீடுகளை ஸ்கெட்ச் போட்டு பின்னர் கொள்ளையடித்த கொள்ளையர்கள் தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கொள்ளையர்களிலும் லோக்கல் கொள்ளையர்கள் முதல் நவீன விஞ்ஞான கொள்ளையர்கள் வரை திருடுபவர்கள் உள்ளனர். சாதாரணமாக வேவு பார்த்து கொள்ளையடிப்பது ஒருவகை என்றால் கூகுள் மேப் உதவியுடன் வசதியானவர்கள் வீடுகளை அட்சர சுத்தமாக அளவிட்டு கோடிக்கணக்கில்  கொள்ளையடித்து போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்து வந்தவர்கள் தெலுங்கானாவில் சிக்கினர்.

சமீபத்தில் சென்னை திநகரில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் பாலகுமார் வீட்டில் அக்டோபர் 22-ம் தேதி ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை போனது. பின்னர் அதே பாணியில் தேனாம்பேட்டை வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளை நடந்தது. போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், வேறொரு கொள்ளை வழக்கில், ஆந்திராவைச் சேர்ந்த சதீஷ்ரெட்டி என்பவனை, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் வடக்கு மண்டல போலீசார் கைது செய்தனர். நடத்திய விசாரணையில் சதீஷ் ரெட்டி மற்றும் நரேந்திரன் கூட்டாளிகள் சேர்ந்து சென்னையில் மேற்கண்ட இடங்களில் கொள்ளை அடித்தது தெரியவந்தது.

கொள்ளையடிப்பதில் இவர்கள் பாணியே தனி.  முதலில் கூகுள் மேப் மூலம் சென்னையில் வசதிப்படைத்தவர்கள் வசிக்கும் பகுதியை கண்டறிந்து ஸ்கெட்ச் போட்டு பின்னர் அந்த இடத்தின் மற்ற அம்சங்களை கணக்கெடுத்து கொள்ளையடிப்பது சத்யரெட்டியின் வழக்கம்.

கொள்ளையன் சதீஷ் ரெட்டி, நரேந்திரன் ஆகியோரிடமிருந்து  ஐதராபாத் வடக்கு மண்டல போலீஸார்.  கோடிக்கணக்கில் மதிப்புடைய வைர கற்கள் மற்றும் தங்க நகைகளை மீட்டனர்.

இந்நிலையில் தகவலறிந்துச் சென்ற நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி தலைமையிலான தனிப்படை  போலீஸார் தெலுங்கான மாநில சிறையில் அடைக்கப்பட்டிருந்த சதீஷ் ரெட்டி, நரேந்திரன் ஆகிய இருவரையும்  காவலில் எடுத்து  சென்னை அழைத்து வந்துள்ளனர்.

சதீஷ் ரெட்டி, நரேந்திரனிடம் இருந்து 120 சவரன் நகைகளை மீட்டுப்பட்டுள்ளது. சதீஷ் ரெட்டி, நரேந்திரன் இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்குப்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். பின்னர் அவர்களை போலீஸ் காவலில் எடுத்து நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரிக்க உள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் தமிழகத்தில் நடந்த வேறு சில கொள்ளை வழக்குகளிலும் துப்புத்துலங்கும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x