Last Updated : 03 Dec, 2018 03:18 PM

 

Published : 03 Dec 2018 03:18 PM
Last Updated : 03 Dec 2018 03:18 PM

நீதிமன்றத்தின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க ஒப்புதல்: ஜாக்டோ- ஜியோ தகவல்

நீதிமன்றத்தின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாக்டோ- ஜியோ தெரிவித்துள்ளது.

லோகநாதன் என்பவர் தரப்பு வழக்கறிஞர் செல்வம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பாக, "பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி செவ்வாய்க்கிழமை முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

டிசம்பர் 10 ஆம் தேதி முதல் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டத்தால், மாணவர்களும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாவர். வேலை நிறுத்தத்தால், 'கஜா' புயல் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும்.

அதோடு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் விதிப்படி, அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அனுமதி இல்லை. ஆகவே ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும்" என முறையிட்டார்.

ஜாக்டோ-ஜியோ தரப்பு வழக்கறிஞர், இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்தார். இதையடுத்து மதியம் 1 மணிக்கு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தனர்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஏற்கெனவே இதே போன்ற வழக்கில், அரசுக்கு நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்தது. ஆனால் ஊதிய உயர்வைத் தவிர பிற கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மேலும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஸ்ரீதர் குழுவின் அறிக்கை நவம்பர் 27 ஆம் தேதியே சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால், நவம்பர் 6 ஆம் தேதியே சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த இயலாது எனத் தெரிவித்தார். ஆகவே போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அது குறித்து திங்கள்கிழமை அறிக்கை தாக்கல் செய்வதாகத் தெரிவித்தார்.

இதையேற்ற நீதிபதிகள், திங்கள்கிழமை வரை ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை ஒத்திவைக்க இயலுமா? என கேட்டனர். அது குறித்து ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகளிடம் கேட்டு தெரிவிப்பதாக வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து வழக்கை 1.30 மணிக்கு ஒத்திவைத்தனர்.

பின்னர் 1.30 வழக்கு மணிக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர். 

இதையடுத்து நீதிபதிகள், ஜாக்டோ-ஜியோ வழக்கில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த அமைக்கப்பட்ட ஸ்ரீதர் குழுவின் அறிக்கை அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x