Published : 07 Dec 2018 05:04 PM
Last Updated : 07 Dec 2018 05:04 PM
அரசு மருத்துவமனைகளில் அதிக அளவில் நோயாளிகளிடம் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரை சென்னை, மதுரை, திருச்சி உட்பட 20 அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
அரசுத்துறைகள் என்றாலே வேலை நடக்க வேண்டும் என்றால் லஞ்சம், கையூட்டு இல்லாமல் வேலை நடக்காது என்கிற நிலை உள்ளது. அதில் முதலிடத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களும், இரண்டாம் இடத்தில் காவல்துறையும் அடுத்தடுத்த இடங்களில் வட்டாட்சியர் அலுவலம், பத்திரப்பதிவுத்துறை என உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.
இதில் அரசு மருத்துவமனைகளும் சளைத்தவை அல்ல என்பதை பலமுறை பல சந்தர்ப்பங்கள் மூலம் வெளிப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சுகாதாரத்துறையும், பொது சுகாதாரத்துறையும் சிறப்பாக செயல்படுகிறது. அதி நவீன வசதிகள், அற்புதமான மருத்துவர்கள், உயரிய சிகிச்சைகள் அரசு மருத்துவமனையில் கிடைக்கிறது.
லட்சக்கணக்கான ஏழை, நடுத்தர மக்களுக்கு சேவையாற்றிவரும் சிறப்பு வாய்ந்த ஆயிரக்கணக்கான மருத்துவர்களும், செவிலியர்களும் பணியில் உள்ளனர். ஆனால் இம்மருத்துவமனைகளில் ஆண்டாண்டு காலமாக இருக்கும் லஞ்சம் நோயாளிகளிடம் பணம் பிடுங்குவது இல்லையென்றால் சிகிச்சைக்கு மறுப்பது போன்ற காரியங்களில் சில செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளதாக அவ்வப்போது புகார்கள் வந்தவண்ணம் உள்ளது.
குழந்தை பிறந்தால் ஆணா? பெண்ணா? என சொல்வதற்கு 1000 ரூபாய் முதல் ரூ.1500 வரை கொடுக்கவேண்டும் என்கிற எழுதப்படாத விதி இன்றும் அரசு மருத்துவ மனைகளில் உள்ளது. எங்கே கொடுக்காவிட்டால் குழந்தையை மாற்றிவிடுவார்களோ, சரியான சிகிச்சை தரமாட்டார்களோ என பயந்தே பணம் கொடுக்கும் நிலை உள்ளது. இது எழுதப்படாத விதியாகவும் மாறிப்போனது.
இதேப்போன்று நோயாளிகளை எக்ஸ்ரே, ஸ்கேனுக்கு, வேறு சோதனைக்கு அழைத்துச் செல்ல தள்ளுவண்டியில் அழைத்துச் செல்ல 300 முதல் 1000 ரூபாய்வரை லஞ்சமாக பெறுவதாக நோயாளிகள் தரப்பு புகார் அளித்துள்ளனர். இது தவிர ஸ்கேன் எடுக்க, எக்ஸ்ரே எடுக்க, அறுவைசிகிச்சைக்கு என பல வகைகளில் லஞ்சம் கேட்பதாக புகார்கள் தொடர்ந்து வரவே லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடிசோதனையில் இறங்கினர்.
சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனை, திருச்சி அரசுப்பொது மருத்துவமனை, சேலம், கடலூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு மருத்துவமனைகளில் இன்று அதிரடியாக புகுந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் ராஜாஜி மருத்துவமனையிலும், கடலூர் மருத்துவமனையிலும் பணம் சிக்கியதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT