Published : 18 Dec 2018 09:18 AM
Last Updated : 18 Dec 2018 09:18 AM

கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட பெண் உட்பட 4 பேர் கைது

கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட முயன்றதாக பெண் உட்பட 4 பேரை மாதவரம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

மாதவரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மூலக்கடை, எம்ஆர்எச் சாலையில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு இளைஞர் ஒருவர் மதுபாட்டில் வாங்க ரூ.500 கொடுத்தார். அந்த ரூபாய் நோட்டில் சந்தேகம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அதை டாஸ்மாக் ஊழியர்கள் சோதித்து பார்த்தபோது அது கள்ள நோட்டு என்பது தெரியவந்தது. இதுகுறித்து டாஸ்மாக் கடை மேலாளர் சுதாகர் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சம்பந்தப்பட்ட இளைஞரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீஸார் நடத்திய விசாரணையில் கள்ள நோட்டை மாற்ற முயன்றது மாதவரம் சத்தியமூர்த்தி தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் (32) என்பது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின்பேரில் கூட்டாளிகளான ஆர்.கே.நகர் ரபியா (30), வியாசர் பாடி சாகுல் அமீது (48), புதுவண்ணாரப் பேட்டை பழனிச்சாமி (50) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 4 பேரும் புழல் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து ரூ.68 ஆயிரத்துக்கான 137 ஐநூறு ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத் தப்பட்ட லேப்டாப், பிரின்டர், கட்டிங் மெஷின் மற்றும் 4 பேப்பர் பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘‘4 பேரும் பல மாதங் களாக கள்ளரூபாய் நோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விட்டுள்ளனர். இவர்களின் பின்னணியில் வெளிநாட்டு கும்பல் உள்ளதா என விசாரித்து வருகிறோம். தொடர்ந்து விசாரணை நடக்கிறது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x