Published : 03 Dec 2018 08:36 AM
Last Updated : 03 Dec 2018 08:36 AM

தமிழகத்தில் 253 இடங்களில் உள்ள பிஎஸ்என்எல் சேவை மையங்களில் ஆதார் பதிவு வசதி: 90 நாட்களில் வழங்க இந்திய தனி அடையாள ஆணையம் திட்டம்

தமிழகம் முழுவதும் 253 இடங் களில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங் களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளும் வசதி விரைவில் வர உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் வழங் கும் சமூகநலத் திட்டங்களை உண்மையான பயனாளிகளிடம் சேர்ப்பதற்காக, கடந்த 2010-ம் ஆண்டு முதல், பொதுமக்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது. ஆதார் பதிவு மற்றும் ஆதார் அட்டை வழங்கும் பணி களை இந்திய தனி அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) மேற் கொண்டு வருகிறது.

மற்ற மாநிலங்களில், யுஐடிஏஐ நிறுவனமே நேரடியாக, தன்னிடம் பதிவுபெற்ற முகமைகள் மூலமாக ஆதார் விவரங்களை பதிவு செய்து, ஆதார் அட்டைகளை அச்சிட்டு வழங்கியது. ஆனால் தமிழகத்தில், மக்கள்தொகை பதிவேடு அடிப்படையில்தான் ஆதார் பதிவு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது.

அதனால் பெசன்ட்நகரில் உள்ள மத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகம், தமிழகம் முழுவதும் ஆதார் பதிவை மேற்கொண்டது. அதில் பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் இருந்தன. அதனால் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாயினர்.

பின்னர் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக 308 இடங்களில், அதன் ஆதார் நிரந்தர மையங்கள் மூலமாக ஆதார் பதிவு மற்றும் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அங்கு அதிக அளவில் மக்கள் குவிந்ததால் நீண்ட வரிசை யில் நிற்க வேண்டி இருந்தது. முன்பதிவு செய்து, பல நாட்களுக் குப் பிறகு ஆதார் பதிவுகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது.

இந்நிலையில், ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்வதை எளிமை யாக்கும் வகையில் தமிழகத்தில் சுமார் 1,400 வங்கிக் கிளைகள், 1,500 அஞ்சலக் கிளைகளில் ஆதார் பதிவு செய்யும் வசதியை யுஐடிஏஐ நிறுவனம் ஏற்படுத்தி இருந்தது. இந்த வசதியை மேலும் எளிமைப்படுத்தும் விதமாக தற்போது யுஐடிஏஐ நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது.

அதன் மூலம் நாடு முழுவதும் 3,000 பிஎஸ்என்எல் வாடிக்கை யாளர் சேவை மையங்களில் ஆதார் பதிவு வசதிகளை ஏற்படுத்த யுஐடிஏஐ நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. இந்த வசதிகள் 90 நாட்களுக்குள் ஏற்படுத்தப்பட உள்ளதாக யுஐடிஏஐ தெரிவித் துள்ளது.

தமிழகத்தில் அமைய உள்ள மையங்கள் குறித்து தமிழ்நாடு மற்றும் சென்னை வட்டார பிஎஸ்என்எல் அதிகாரிகளிடம் கேட்டபோது,

“தமிழ்நாடு வட்டாரத்தில் 200 வாடிக்கையாளர் சேவை மையங்களில் ஆதார் பதிவு வசதி கொண்டுவரப்பட உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய சென்னை வட்டாரத்தில் 53 சேவை மையங்களில் ஆதார் பதிவு வசதி கோரி யுஐடிஏஐ நிறுவனத்துக்கு விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆதார் பதிவு வசதி தொடங்கப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x