Published : 21 Dec 2018 12:58 PM
Last Updated : 21 Dec 2018 12:58 PM

குட்கா வழக்கு: உண்மைக் குற்றவாளிகளை சிபிஐ தப்பவிடுகிறதா? - ஸ்டாலின் கேள்வி

குட்கா வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "40 கோடி ரூபாய்க்கு மேல் மாமூல் பெற்ற குட்கா வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள உண்மைக் குற்றவாளிகளை விடுவிக்கும் உள்நோக்கத்துடன், சிபிஐ அமைப்பின் விசாரணை திசை திரும்புகிறதோ என்ற பலத்த சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

லஞ்சம் கொடுத்தவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், லஞ்சம் பெற்றதாக குட்கா டைரியில் இடம்பெற்றுள்ள சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தமிழக காவல்துறை டிஜிபியாக இருக்கும் டி.கே ராஜேந்திரன் ஆகியோர் அதே பதவியில் தொடர்ந்து நீடிப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் நிர்வாகத்திற்கு அவமானகரமாகவும் இருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவின் அடிப்படையில் நடைபெறும் சிபிஐ விசாரணையில், அமைச்சர் வீட்டிலும், டிஜிபி வீட்டிலும் ரெய்டு நடத்திய பிறகும் இருவரும் பதவியில் தொடருவது நியாயத்தைக் குழி தோண்டிப் புதைப்பதாக உள்ளது. இப்போது அமைச்சருக்கு சம்மன் அனுப்பி இரு நாட்கள் சிபிஐ முன்பு பல மணிநேர விசாரணைக்கு ஆஜரான பிறகும் எந்தவித நாணமுமின்றிப் பதவியில் தொடருகிறார் என்பது பொதுவாழ்வில் தூய்மை, அலுவலகப் பணிகளில் நேர்மை என்ற அடிப்படைக் கோட்பாடுகளை சுக்கு நூறாக உடைத்துப் போட்டிருக்கிறது.

குட்கா வழக்கில் வருமான வரித்துறை அனுப்பிய கடிதம் காணவில்லை என்று உயர் நீதிமன்றத்திலேயே அடாவடியாக சத்திய பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தார் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதன். குட்கா டைரியில் இடம்பெற்றுள்ள விவரத்தையே மத்திய பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்கு தெரியாமல் மறைத்து டி.கே. ராஜேந்திரனுக்கு ஓய்வு பெற்ற பிறகும் இரு வருடம் அவருக்கு பணி நீட்டிப்பு வாங்கிக் கொடுத்துள்ளார்.

ஆனால், ஊழல் டைரியில் இடம் பெற்றுள்ளதை மறைத்து, சத்தியத்தைக் (?) காப்பாற்றும் அந்த தலைமைச் செயலாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உயர் நீதிமன்றத் தீர்ப்பில் குட்கா விசாரணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் சுகாதாரத்துறையில் உள்ள ஒரு கடை நிலை ஊழியர்.

அதற்கு அனுமதி கொடுத்தவர்கள் மீதோ, அவர் எப்படி நாட்டிலேயே மூத்த வழக்கறிஞர்களுக்கு கட்டணம் கொடுத்து வழக்கை நடத்தினார் என்பது குறித்தோ துறை ரீதியான எந்த விசாரணையும் இல்லை. அவரைக் கைது செய்து விசாரித்த சிபிஐ அதிகாரிகளும் அந்த கேள்விகளுக்கான விடைகளைப் பெற்று துறை நடவடிக்கைக்கு அனுப்பியிருக்கிறார்களா என்பதும் வெளிவரவில்லை.

தலைமைச் செயலாளருக்கு வருமான வரித்துறை அனுப்பிய கடிதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் உள்ள சசிகலா அறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித்துறையே உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. அதன்பிறகு கூட அந்தக் கோப்புகளை சசிகலா அறைக்கு அனுப்பிக் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

அது மட்டுமின்றி இன்னொரு பக்கம் ஆர்.கே.நகர் தேர்தல் முறைகேடு தொடர்பாக கைப்பற்றப்பட்ட 89 கோடி ரூபாய் லஞ்ச பட்டியல் வழக்கிலும் விஜயபாஸ்கர் பெயரை சேர்க்காமல் அவரை சென்னை மாநகர காவல்துறை ஆணையரும், சென்னை மாநகராட்சி ஆணையரும் தப்பவிட்டுள்ளார்கள். அதையும் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது.

இப்படி அடுத்தடுத்து ஆர்.கே.நகர் வழக்கு, குட்கா வழக்கு போன்றவற்றில் சிக்கியுள்ளவர்களைக் காப்பாற்றும் உள்நோக்கத்துடன் அதிமுக அரசு செயல்பட்டு வருவது ஒருபுறமிருக்க, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விசாரணையை எடுத்துக்கொண்ட சிபிஐ அமைப்பும் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோரை எப்படியாவது காப்பாற்ற நினைக்கிறதோ என்ற வலுவான சந்தேகம் எழுந்திருக்கிறது.

இந்த வழக்கினை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகள் திடீரென்று மாற்றப்பட்டபோது அவர்களை மீண்டும் அதே பதவிகளில் நியமிக்க வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை விடுத்தேன். ஆனால், அப்படி எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல் இருப்பதால் சிபிஐ விசாரணை எந்த திசை நோக்கி நகருகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. 

டிஜிபி வீடு சிபிஐ அதிகாரிகளால் சோதனையிடப்பட்டும் இன்று வரை அவர் விசாரணைக்காக அழைக்கப்படாததும், குட்கா டைரியில் இடம்பெற்றுள்ள அவர் தமிழக காவல்துறைக்கு இன்னும் தலைமை தாங்குவதும், பயிரை மேய்ந்த வேலியைப் பார்த்துக்கொண்டிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

புகழ் பெற்ற தமிழ்நாடு காவல்துறையின் பெருமைக்கு சிறுமை சேர்த்திடும் பேரிழுக்கு என்பது மட்டுமின்றி, ஒட்டுமொத்த காவல்துறை அமைப்பில் ஒழுக்கமும், கட்டுப்பாடும் உருக்குலைவதற்கும் காரணமாக அமைந்து வருகிறது. லஞ்ச ஊழல் தடுப்புத்துறை முறையாக இந்த வழக்கை விசாரிக்காது என்றுதான் திமுகவின் சார்பில் சிபிஐ விசாரணை கோரப்பட்டது.

அப்படி உச்ச நீதிமன்றமே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் சிபிஐ அமைப்பின் விசாரணை ஒட்டுமொத்த குட்கா டைரி விவகாரத்தை இப்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களுடன் அரைகுறையாக முடித்துவிட்டு, அமைச்சர், டிஜிபி போன்றோரை தப்பவிடும் நோக்கில் அமைந்துள்ளதோ என்ற நியாயமான கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது.

இந்நிலையில் சிபிஐ ரெய்டு நடத்திய அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்டு உண்மை குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ள இந்த விசாரணை சிறிதும் தடம் மாறிவிடாமல் சட்டப்படி நேர்மையான பாதையில் செல்வதற்கேற்றபடி எச்சரிக்கையுடன் பாதுகாத்திட வேண்டிய பொறுப்பும்,  கடமையும் சிபிஐ அமைப்புக்கு இருக்கிறது என்றும், அமைச்சரையும், டிஜிபியையும் விடுவிக்கும் நோக்கில் விசாரணையின் பாதை தலைகீழாக மாறுமேயானால் திமுக உச்ச நீதிமன்றத்தை மீண்டும் நாடுவதற்குத்  தயங்காது என்றும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

ஊழல் புகாருக்கு உள்ளாகியிருக்கும் முதல்வர், குட்கா அமைச்சரை ராஜினாமா செய்யச் சொல்வார் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், இருவரும் ஒரே மாதிரியான சிறகுகள் கொண்ட கறும்பறவைகள். ஆகவே சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்.

அதற்கான நடவடிக்கையை ஆளுநர் மேற்கொள்ள வேண்டுமெனவும், குட்கா ஊழல் வழக்கின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ள தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு பொறுப்பில் இருக்கும் டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, தலை சிறந்த தமிழகக் காவல்துறை அப்பழுக்கற்ற, ஊழல் கறைபடியாத தலைமையின் கீழ் முறையாகச் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x