Last Updated : 18 Dec, 2018 04:23 PM

 

Published : 18 Dec 2018 04:23 PM
Last Updated : 18 Dec 2018 04:23 PM

பெண்ணாடம் அருகே சமையல் எரிவாயு வெடித்து 6 பேர் காயம்

பெண்ணாடம் அருகே சமையல் எரிவாயு வெடித்ததில் 6 பேர் காயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த முருகன்குடியைச் சேர்ந்தவர் ரவி (54). தேமுதிகவில் நகர அவைத் தலைவரான இவர், சுப நிகழ்ச்சிகளுக்கான பாத்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இதற்கான கடையை வீட்டின் எதிர்ப்புறத்தில் அமைத்திருந்தார்.

இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) வைகுண்ட ஏதாதசியை முன்னிட்டு அதிகாலையிலேயே சுடு தண்ணீர் போடுவதற்காக கடையிலிருந்த சிலிண்டரை பயன்படுத்தி கேஸ் அடுப்பில் சுடு தண்ணீர் போட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். அவ்வாறு வீட்டிற்குச் சென்றவர் அடுப்பில் தண்ணீர் போட்டதை மறந்துள்ளார்.

சிறிதுநேரத்தில் கடையிலிருந்து புகை வந்துள்ளது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் கடைக்குச் சென்றபோது, கேஸ் அடுப்பு பாத்திரம் எரிந்து கொண்டிருந்து. இதையடுத்து, ரவி உள்ளே சென்று அணைக்க முற்பட்டபோது, கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறி, தீப்பிடித்துள்ளது.

சிறிது நேரத்தில் மற்றொரு சிலிண்டரும் வெடித்துச் சிதறியதில், ரவி மற்றும் பக்கத்துக் கடையைச் சேர்ந்த பழனிவேல், அசோக்குமார், நம்ஜான், சிவபாலன் மற்றும் பரமசிவம் ஆகியோர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், அதைத் தொடர்ந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே தீ விபத்து தொடர்பாக தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்புத் துறையினர் தீயணைப்பு வீரர் சண்முகம் தலைமையில் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்து தொடர்பாக பெண்ணாடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x