

சென்னையில் ஓடும் சுமார் 72 ஆயிரம் ஆட்டோக்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி புதிய கட்டணம் நிர்ணயித்து முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, குறைந்தபட்ச கட்டணம் ரூ.25, கூடுதலாக கி.மீ.க்கு ரூ.12 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. புதிய கட்டணம் உடனடியாக அமலுக்கு வந்தது.
அடுத்த 3 மாதத்தில் ஜிபிஎஸ் தொழில்நுட்ப வதியுடன் கூடிய டிஜிட்டல் மீட்டர்கள், ஆட்டோக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை டிஜிட்டல் மீட்டர் வழங்கவில்லை. இதனால், ஆட்டோ டிரைவர்கள் மீண்டும் பேரம் பேசி கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளனர். இது பயணிகள் மத்தி யில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளன (ஏஐடியூசி) மாநில பொதுச் செயலாளர் சேஷசயனம், ஐஎன்டியுசி மாநில செயலாளர் எம்.ஜி.அழகேசன் ஆகியோரிடம் கேட்ட போது, ‘‘ஆட்டோவுக்கு கட்டணம் நிர்ணயித்த பிறகு, 3 மாதத்தில் ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய டிஜிட்டல் மீட்டர் இலவசமாக வழங்குவதாக அரசு அறிவித்தது. ஆனால், இன்னும் வழங்கவில்லை.
தற்போது ஆட்டோ டிரை வர்கள் மீண்டும் பேரம் பேசி ஓட்டத் தொடங்கிவிட்டனர். இதற்கு அரசுதான் முழு காரணம்’’ என்றனர்.
இதுதொடர்பாக போக்கு வரத்துத் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஆட்டோக்களுக்கான இலவச டிஜிட்டல் மீட்டர் தயாரிக்கும் பணியை ‘எல்காட்’ நிறுவனம் செய்துவருகிறது. விரைவில் இந்தப் பணியை முடித்து மீட்டர்களை வழங்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.