12,347 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை தயார்: அதிகாரிகள் தகவல்

12,347 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை தயார்: அதிகாரிகள் தகவல்
Updated on
1 min read

அரசு பள்ளிகளில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்ட 12,347 ஆசிரியர்களுக்கும் பணி நியமன ஆணை தயார் நிலையில் உள்ளது.

வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தொடக்கக் கல்வித்துறைக்கு 1,816 ஆசிரியர்களும், பள்ளிக் கல்வித்துறைக்கு 10,531 ஆசிரியர்களும் என மொத்தம் 12,347 பேர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ்-2, பட்டப் படிப்பு, பி.எட். இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த வாரம் ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.

பணிநியமன உத்தரவு வழங்கப்பட இருந்த நிலையில், வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம் பணி நியமன ஆணை வழங்க இடைக்கால தடை விதித்தது. இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணி நியமன உத்தரவை எதிர்பார்த்து இருக்கிறார்கள். உயர் நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும், ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவை அவர்கள் கலந்தாய்வு சென்றுவந்த மாவட்டத்தில் கல்வி அதிகாரிகள் மூலம் வழங்க தொடக்கக் கல்வித்துறையிலும், பள்ளிக் கல்வித்துறையிலும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பணி நியமன ஆணை ஆன்லைனிலேயே தயாராக இருப்பதால், நீதிமன்ற உத்தரவு வந்தும் ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலமாக உத்தரவை விரைந்து வழங்கிட முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in