விவசாய நிலங்கள் வழியே மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: ஒருநாள் விற்பனை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

விவசாய நிலங்கள் வழியே மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: ஒருநாள் விற்பனை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
Updated on
1 min read

விவசாய நிலங்கள் வழியே மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளின் 5 ஆவது நாள் காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவாக திருப்பூர் மாவட்ட உழவர் சந்தைகளில் ஒரு நாள் விற்பனை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் இணைந்து திருப்பூர் மாவட்டம் புகழூர் முதல் சத்தீஸ்கர் வரை மின்சாரம் உற்பத்தி செய்து கொண்டுசெல்லும் திட்டத்தினை மேற்கொண்டு வருகிறது. இதற்காக திருப்பூர், கோவை ஈரோடு உட்பட 14 மாவட்ட விவசாய நிலங்களை கையகப்படுத்தி அதன் வழியாக மின்  கோபுரம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசின் இத்தகைய செயல்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மின்சாரத்தை நிலத்திற்கு அடியில் கேபிள் லைன் மூலம் கொண்டு செல்ல வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்டம் கள்ளிபாளையத்தில் விவசாயிகள் இன்று (வெள்ளிக்கிழமை) 5 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திடும் வகையில் திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், காங்கேயம், அவிநாசி ஆகிய பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் தினசரி மார்க்கெட்டில் விவசாயிகள் இன்று ஒருநாள் விற்பனை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விற்பனைக்கு வராததால் சுமார் 100 டன் வரையிலான காய்கறிகள் தேக்கமடையும் சூழ்நிலை ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in