Published : 21 Dec 2018 03:17 PM
Last Updated : 21 Dec 2018 03:17 PM
கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகள் பதவிக்கு அகில இந்திய அளவில் தேர்வு நடத்த வேண்டும் என்று நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது, மத்திய பாஜக அரசின் எஜமானத்தனத்தின் உச்சகட்ட ஆணவம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகள் பதவிக்கு அகில இந்திய அளவில் தேர்வு நடத்த வேண்டும் என்று நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது. அந்த தேர்வை நடத்தும் பொறுப்பை மத்திய பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை நிதி ஆயோக் சமீபத்தில் வழங்கியுள்ளது.
மேலும், ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீசஸ் என்னும் குடிமைப்பணிகளில் சேருவதற்கு பொதுப்பிரிவினருக்கு தற்போது வயது உச்சவரம்பு 30 ஆக உள்ளது. இந்த உச்சவரம்பை 27 ஆக குறைக்க வேண்டும். இதை 2022-23 ஆண்டுக்குள் பல கட்டங்களாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நிதி ஆயோக் கூறி உள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "மாநில உரிமைகளைப் பறிக்கும் இந்தப் பரிந்துரை - 'மாநில அரசுகளே தேவையில்லை' என்ற மத்திய பாஜக எஜமானத்தனத்தின் உச்சகட்ட ஆணவமாக இருக்கிறது.
மாநில சுயாட்சியின் உறைவிடமான தமிழகத்தில் இதுபோன்றதொரு அநீதியை அனுமதிக்காமல் இதனைக் கண்டித்து - தமிழக அரசு உடனே எதிர்ப்புக்குரல் எழுப்ப வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT