Published : 17 Dec 2018 11:21 AM
Last Updated : 17 Dec 2018 11:21 AM
கருணாநிதி சிலையை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்தார்.
மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் சிலை திறக்கும் நிகழ்ச்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், ரஜினிகாந்த், பிரபு உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முக்கிய பிரமுகர்கள் 300 பேர் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாலை 5 மணியளவில் சோனியாகாந்தி கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார். அப்போது கருணாநிதி எழுதிய 'செம்மொழியாம் தமிழ் மொழியாம்' பாடல் இசைக்கப்பட்டது.
இதையடுத்து, சிலை திறப்பு நிகழ்ச்சி முடிந்து அனைத்து தலைவர்களும் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தனது செல்போனில் கருணாநிதியின் சிலையை ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்தார். அந்த புகைப்படம் ட்விட்டரில் வைரலானது.
இதன்பிறகு பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, "கருணாநிதியின் இல்லத்திற்கு முதன்முறையாக சென்றபோது மிகப்பெரிய வீட்டில் அவர் வசிப்பார், பெரிய பெரிய பொருள்கள் இருக்கும் என நினைத்தேன். ஆனால், மிக எளிமையான வீட்டில் பணிவுடன் கருணாநிதி இருந்தார்" என ராகுல்காந்தி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT