காற்றழுத்த சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்கள் மழை; எங்கெங்கு பெய்யும்? - வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்

காற்றழுத்த சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்கள் மழை; எங்கெங்கு பெய்யும்? - வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்
Updated on
1 min read

தமிழகத்தில் காற்றழுத்த சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்கள் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செல்வகுமார் கூறியதாவது:

''சுமத்திராவில் இருந்து சோமாலியாவுக்கு கிழக்கில் இருந்து மேற்காக காற்றழுத்த சுழற்சி நகர்கிறது. இது தமிழகம் வழியாக நகர்வதால் 3 நாட்கள் மழை இருக்கும். தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் வேறு இரண்டு சுழற்சிகள் உள்ளன.

இவை இரண்டும் காற்றை தமிழகம் ஊடாக ஈர்த்து அனுப்ப வாய்ப்புள்ளது. இதனால் 4, 5, 6 தேதிகளில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். குறிப்பாக ராமேஸ்வரம் முதல் திருவள்ளூர் வரையில் தமிழக கடல் பகுதியில் கூடுதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தெற்கு ஆந்திராவிலும் இன்று மாலை முதல் மழை பெய்யும். சென்னை உள்ளிட்ட வட தமிழக கடல் பகுதியில் 3-ம் தேதி மாலை மழை தொடங்கும்.  4 -ம் தேதி அதிகாலை முதல் 5-ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும். வட தமிழகத்தில் ஒரளவு கனமழைக்கும் வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கணிசமான அளவு மழையை எதிர்பார்க்கலாம்.

மத்திய மாவட்டங்களில் 5 காலை முதல் 6-ம் தேதி பிற்பகல் வரை மழை பெய்யும். மேற்கு மற்றும் தென் மாவட்டங்கள் 5 பிற்பகல் தொடங்கி 6 இரவு வரை மழை பெய்யும்.

இந்த மூன்று நாட்களில் நீலகிரி மாவட்டத்தில் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இரண்டு காற்றழுத்த சுழற்சியும் ஒன்றிணையும் பகுதியாக நீலகிரி இருப்பதால் அங்கு பலத்த மழை பெய்யும். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணை பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது''.

இவ்வாறு செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in