Published : 09 Dec 2018 10:02 AM
Last Updated : 09 Dec 2018 10:02 AM

2 மகள்களை கொலை செய்த தந்தை கைது: பயமாக இருந்ததால் தற்கொலை முடிவை கைவிட்டதாக வாக்குமூலம்

கோவை மசக்காளிபாளையம் ரோட்டில் உள்ள நீலிக்கோனார் வீதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் (45). சௌரிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரதிநிதி. இவரது மனைவி செல்வராணி. இவர்களது மகள்கள் ஹேமவர்ஷினி (15), ஸ்ரீஜா (8) ஆகியோரை கடந்த 6-ம் தேதி பத்மநாபன் கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.

கொலை வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் போலீஸார், 3 தனிப் படைகள் அமைத்து அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் பீளமேடு பகுதியில் சுற்றித் திரிந்த பத்மநாபனை, தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையின் போது பத்மநாபன் அளித்த வாக்குமூலம்: மனைவி செல்வராணி உடல்நலம் பாதிக்கப்பட்டவர். நான் குடி பழக்கத்துக்கு ஆளானேன். அதை செல்வராணி கண்டித்ததால், இருவருக்குமிடையே கடந்த 2 ஆண்டுகளாக சண்டை நடைபெற்று வருகிறது.

விரக்தியடைந்த நான் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருந்தேன். 6-ம் தேதி இரவு இருவருக்கும் இடையே சண்டை நடந்து முடிந்து, செல்வராணி தாய் வீட்டுக்குச் சென்றதும், குழந்தைகளைக் கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன்.

பின்னர் இருவரையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன். தற்கொலை செய்து கொள்ள பயமாக இருந்ததால், செல்போனை அணைத்து வைத்து விட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியில் சென்று விட்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x