Published : 07 Dec 2018 08:56 AM
Last Updated : 07 Dec 2018 08:56 AM

தமிழக மக்கள் அனைவரும் தாராளமாக கொடி நாள் நிதி வழங்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் 

தமிழக மக்கள் அனைவரும் தாராளமாக கொடிநாள் நிதி வழங்க வேண்டும் என்று முதல்வர் கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

நம் நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் புனிதப் போரில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களின் சேவை, தியாகத்தை போற்றும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர் 7-ம் தேதி நாடு முழுவதும் முப்படை வீரர் கொடிநாளாக அனுசரிக்கப்படுகிறது. இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்திருக்கும் நம் பாரத நாட்டின் எல்லைப்பகுதிகளை இரவு பகல் பாராமல் காப்பதுடன், புயல் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின்போதும் நாட்டு மக்களை காக்கின்றனர். இந்த முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், ஓய்வு பெற்ற முன்னாள் படை வீரர்கள் நலன்களையும் பேணி காப்பது நமது சமூக கடமையாகும்.

தாய்நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை கொடுக்கும் தியாக சீலர்களான நம் முப்படை வீரர்களின் நலன் காக்கவும், அவர்கள் குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும், தமிழக அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

போரில் உயிரிழந்த படை வீரர்களின் வாரிசுகளுக்கு உயர்த்தப்பட்ட கருணைத் தொகை மற்றும் கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குதல், முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகள் பட்டப்படிப்புகள் மற்றும் பட்ட மேற்படிப்புகள் படிக்க, கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

கொடி விற்பனை மூலம் திரட்டப்படும் நிதியானது, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த சிறப்புமிக்க பணிகள் சீரிய முறையில் தொடரவும், தமிழக மக்களின் நாட்டுப்பற்று, ஈகை குணத்தை வெளிப்படுத்தவும் கொடிநாள் நிதிக்கு தமிழக மக்கள் அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x