

புதிய தலைமைச் செயலக கட்டுமான விவகாரம் தொடர்பாக நீதிபதி ரகுபதி ஆணையம் சேகரித்த ஆவணங்களை மட்டுமே அடிப்படையாக வைத்து மு.க.ஸ்டாலின், துரைமுருகனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட முடியாது என தீர்ப்பளித்துள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை யையும் ரத்து செய்துள்ளது.
கடந்த திமுக ஆட்சி காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. இதில் பல கோடி ரூபாய்க்கு முறை கேடுகள் நடந்துள்ளதாகக் கூறி இதுதொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் ஆணையம் அமைத்து அப் போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அதன்படி, இந்த ஆணையம் முன்னாள் முதல்வர் கருணாநிதி, அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச் சர் துரைமுருகன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது.
இதை எதிர்த்து மூவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 2015-ம் ஆண்டு சம்மனுக்கும், ரகுபதி ஆணைய விசாரணைக்கும் தடை விதித்தது.
இந்தத் தடையை நீக்கக் கோரி அரசு தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், விசாரணை ஆணையங்கள் என்பது கண் துடைப்பு நடவடிக்கை என்றும், நீதிபதி ரகுபதி ஆணையத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், இதுதொடர்பான விசாரணையில் முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விசார ணைக்கு மாற்றலாம் என்றும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் நீதிபதி ஆர்.ரகுபதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே கருணாநிதி இறந்துவிட்டதால் அவர் மீதான வழக்கு மட்டும் முடிக்கப்பட்டது.
இந்நிலையில், உயர் நீதி மன்ற உத்தரவுப்படி நீதிபதி ரகுபதி ஆணையம் சேகரித்த ஆவணங்களின் அடிப்படையில் மு.க.ஸ்டாலின், துரைமுருகனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தமிழக அரசு கடந்த செப்.24-ல் அரசாணை பிறப்பித்தது. இதுதொடர்பாக செப்.28-ம் தேதி அரசு சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
அவசரகதியில் அரசு உத்தரவு
தங்களுக்கு எதிரான அரசாணை மற்றும் கடிதத்தை ரத்து செய்யக் கோரி மு.க.ஸ்டாலின், துரைமுரு கன் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்பு நடந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ‘‘இதுதொடர் பாக ஏற்கெனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, நீதிபதி ரகுபதி ஆணையம் சமர்ப்பித்த ஆவணங்களை முழுமையாக பரிசீலிக்காமல், தமிழக அரசு நேரடியாகவே லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு அவசரகதி யில் உத்தரவிட்டுள்ளது. இது சட்டவிரோதமானது’’ என வாதிட்டார்.
அரசு தரப்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, ‘‘இது தொடர்பான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பி வைக்கவும், அந்த ஆவணங்களில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யவும் ஏற்கெனவே நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார். அதன்படியே, ரூ.629 கோடி அளவுக்கு முறை கேடுகள் நடந்துள்ளதால், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தர விடப்பட்டது’’ என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா நேற்று பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
விசாரணை ஆணையம் என்பது உண்மையைக் கண்டறிந்து அரசுக்கு பரிந்துரை அல்லது அறிவுறுத்தும் அமைப்புதானே தவிர, அதுவே நீதித்துறையின் அங்கமாகி விடாது. ஆணையத்தின் பரிந்துரைகளை நிச்சயமாக நீதிமன்ற உத்தரவுகளாக கருத முடியாது. நீதிபதி ரகுபதி ஆணையம் தனது விசாரணை தொடர்பான எந்தவொரு அறிக் கையையும் அரசுக்கு தாக்கல் செய்யவில்லை.
இந்த ஆணையத்தை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் இதுவரை மேல்முறையீடும் செய்ய வில்லை. நீதிபதி ரகுபதி தனது பதவியை ராஜினாமா செய்ததை அரசும் மறுப்பு தெரிவிக்காமல் ஏற்றுள்ளது.
இந்தச் சூழலில் நீதிபதி ரகுபதி ஆணையம் சேகரித்த ஆவணங் களை மட்டுமே அடிப்படையாக வைத்து இதுதொடர்பாக மனு தாரர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட முடியாது.
மேலும், ஆணையம் அமைக் கப்பட்டதன் நோக்கமும் நிறை வேறவில்லை. எனவே, லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை மற்றும் கடிதம் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீ்ர்ப்பை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் தெரிவித்தார்.