Published : 12 Sep 2014 08:57 AM
Last Updated : 12 Sep 2014 08:57 AM

பாகிஸ்தான் உளவாளியிடம் தீவிர விசாரணை: மும்பை பாணியில் சென்னையை தாக்க திட்டம்?

பாகிஸ்தான் உளவாளி ஒருவர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

சென்னையை குறிவைத்து தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவு அமைப்பினர் எச்சரிக்கை விடுத்து வந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 2012 ம் ஆண்டு திருச்சியில் தமீம் அன்சாரி என்பவரை க்யூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையை சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவரையும் சென்னையில் க்யூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும், அவர்கள் மூலம் தமிழகத்தில் நாசவேலைகளை அரங்கேற்ற பல திட்டங்களை உருவாக்கியதும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜாகீர் உசேனின் கூட்டாளிகளான சிவபாலன், முகமது சலீம், ரபீக் ஆகியோரும் பிடிபட்டனர்.

இந்நிலையில் ஜாகீர் உசேனுடன் இலங்கையில் தொடர்பில் இருந்த பாகிஸ்தானியர்களை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதில் சென்னை சாலிகிராமத்தில் வசிக்கும் அருண் செல்வராஜன் என்பவருடன் அவர்கள் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து புதன் கிழமை இரவு அருண் செல்வராஜனை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

விசாரணையில் அருண் செல் வராஜனின் பூர்வீகம் இலங்கை என்பதும், கடந்த 2 ஆண்டுகளாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப் பில் அவர் வசித்து வருவதாகவும் தெரியவந்தது. அவரது வீட்டில் வியாழக்கிழமை காலையில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு லேப்டாப், ஒரு செல்போன், ஒரு கையடக்க கேமரா, டேட்டா கார்டுகள் மற்றும் சில கடிதங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். அருண் செல்வராஜனின் இலங்கை மற்றும் இந்திய பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டன.

அருண் செல்வராஜனின் லேப்-டாப்பில் சென்னை நகரின் சாலைகளும், முக்கிய இடங் களும் அதில் பதிவு செய்யப் பட்டிருந்தன. இந்த தகவல் களை இரண்டு முறை இலங்கையில் உள்ள பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு அவர் அனுப்பி யிருப்பதும் தெரியவந்தது.

சென்னையில் வசித்த அருண் செல்வராஜன் கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார். தனது நிறுவனம் மூலம் தமிழகத்திலும், இலங்கை யிலும் சில நிகழ்ச்சிகளை நடத்தி யிருக்கிறார். இதில் தமிழகத்தை சேர்ந்த சில நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டுள்ளனர்.

மும்பையில் ஊடுருவி பாகிஸ் தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதுபோல் சென்னையிலும் தாக்குதல் நடத்துவதற்காக அருண் செல்வராஜனை தீவிரவாதிகள் பயன்படுத்தியிருப்பார்களோ என்ற கோணத்திலும் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சந்தேகத்தை உறுதி செய்வதுபோல அருண்செல்வராஜன் லேப்டாப்பில் சென்னை கடற்கரை சாலைகளின் படங்களும் இருந்துள்ளன.

இதற்கிடையே கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஜாகீர் உசேன் மற்றும் அவரது கூட்டாளிகள் சிவபாலன், முகமதுசலீம், ரபீக் ஆகியோர் வியாழக்கிழமை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது சிவபாலன் மட்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை வருகிற 25-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இதைத்தொடர்ந்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அருண் செல்வராஜனை 25ம் தேதிவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x