Published : 26 Dec 2018 01:10 PM
Last Updated : 26 Dec 2018 01:10 PM

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு புதிய பொறுப்பு: அதிமுக நிர்வாக எல்லை மாற்றத்தால் குழப்பம் - கட்சிக்கு பின்னடைவு என மூத்த உறுப்பினர்கள் கருத்து 

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர் பதவிக்காக திருவண்ணாமலை மாவட்ட அதிமுக நிர்வாக எல்லையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் குழப்பதை ஏற்படுத்தும் என்று மூத்த உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டப்பேரவை உறுப் பினரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருப்பவர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன். இவருடன், தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வந்தவர் தி.மலை அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளர் பெருமாள் நகர் ராஜன். முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியால் மாவட்டச் செயலாளர் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், அவருடன் இணைந்து அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் செயல்படுவதாக கூறி, கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.

எதிரிக்கு எதிரி நண்பன் என்பதுபோல், அக்ரி கிருஷ்ண மூர்த்திக்கு எதிராக உள்ள கலசப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வத்தை பெருமாள் நகர் ராஜன் சில காலம் இணைத்துக் கொண்டு செயல் பட்டார். ஆனால், தனக்கென்று தனி பாதையில் பன்னீர்செல்வம் பயணிக்க தொடங்கினார். இதனால், முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சரை எதிர்க்க முடியாமல் ராஜன் திணறினார்.

கட்சி தலைமையிடத்தில் இரண்டு பேரும் பரஸ்பர குற்றச் சாட்டுகளை கூறி வந்தனர். அதில், அமைச்சரின் கை ஓங்கியது. இதற்கிடையில், மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து பெருமாள் நகர் ராஜன் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக, அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நியமிக் கப்பட்டுள்ளார். அவர் வகித்த அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அமைச்சருக்கு வசதியாக, தி.மலை மாவட்ட அதிமுக நிர்வாக எல்லையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. தெற்கு மாவட்டத்துடன் ஆரணி சட்டப்பேரவை தொகுதியை இணைத்தும், வடக்கு மாவட்டத்துடன் கீழ் பென்னாத்தூர் சட்டப்பேரவை தொகுதியை இணைத்துள்ளனர்.

அதிமுகவில் செய்யப்பட்டுள்ள நிர்வாக மாற்றம் மிகப்பெரிய குழப்பம் மற்றும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்று மூத்த உறுப்பினர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும் போது, “வடக்கு மாவட்டத்தில் இருந்த ஆரணி தொகுதியை தெற்கு மாவட்டத்துடனும், தெற்கு மாவட்டத்தில் இருந்த கீழ்பென் னாத்தூர் தொகுதியை வடக்கு மாவட்டத்துடன் இணைத்துள் ளனர். மாவட்டச் செயலாளர் பதவி பெற்றுள்ள அமைச்சரின் வசதிக்காக, கட்சித் தலைமை மாற்றம் செய்துள்ளது. இது பல் வேறு குழப்பங்களை ஏற்படுத்தும்.

தெற்கு மாவட்ட அவைத் தலைவர் அன்பழகன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் அமுதா அருணாசலம் (பெண்), துரை (பொது), மாவட்டப் பொருளாளர் நயினாக்கண்ணு, இளைஞர் பாசறை செயலாளர் சிவக்குமார் ஆகியோர் தற்போது உள்ளனர். ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி இணைக்கப்பட்டுள்ளதால் வடக்கு மாவட்ட அவைத் தலைவர் ஜெமினிராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் ரமணி நீலமேகம் (பெண்), கருணாகரன்(பொது), மாவட்டப் பொருளாளர் சுபாஷ் சந்திரபோஸ், இளைஞர் பாசறை செயலாளர் கஜேந்திரன் ஆகியோர் உள்ளனர். இவர்களில் தலா ஒருவர், தனது பதவியை இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பதவியை இழப்பவர்கள் அமைச்சருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்த அதிக வாய்ப்புள்ளது. இந்த மாற்றத்தால் நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் கட்சிக்கு பின்னடைவு ஏற்படுத்தும்.

தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளராக உள்ள தொப்புளான், கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்தவர் என்பதால், வடக்கு மாவட்ட அதிமுகவுக்கு சென்று விடுகிறார். அதேநேரத்தில் வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ள அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், அந்த பதவியில் இருந்து விலகி வேறொரு நபருக்கு கொடுக்க வேண்டும். அந்த வாய்ப்பு ஆரணிக்கு கிடைக்குமா? அல்லது திருவண்ணாமலைக்கு கிடைக்குமா? என்று தெரியாது. அதேபோல், தெற்கு மாவட்ட அலுவலகம் எங்கு செயல்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தொகுதி மக்களிடம் தனது செல்வாக்கை உயர்த்திக் கொள் வதற்காக அனைத்து அரசு விழாக்களையும் ஆரணியில் நடத்தி வரும் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கட்சி நிகழ்ச்சிகளை ஆரணியில் நடத்தினாலும் ஆச் சரியப்படுவதற்கு இல்லை.

ஆரணி மற்றும் திருவண் ணாமலை நாடாளுமன்ற தொகுதிகள், தெற்கு மாவட்ட அதிமுகவில் இடம்பெற்றுள்ளது. வடக்கு மாவட்டத்துக்கு எம்பி தொகுதியின் தலைமையிடம் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. எதிர்காலத்தில், இரண்டு தொகுதி எம்பிக்களும், மாவட்ட முழுவதும் ஆதாயம் தேடும் நிலை ஏற்படும் என்பதால் பல்வேறு பிரச்சினைகள் எழும். மாவட்ட அதிமுக நிர்வாக எல்லை களில் மாற்றம் செய்யாமல் பதவி வழங்கி இருக்கலாம்.

முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், கலசப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்திருக்கலாம். இவர்கள் இல்லாதபட்சத்தில், தெற்கு மாவட்ட எல்லைக்கு உட்பட்ட ஒரு வரை தேர்வு செய்திருக்கலாம். ஆனால், பிரச்சினைகளை பற்றி யோசிக்காமல், மாவட்ட அதிமுக நிர்வாக எல்லையில் மாற்றம் செய் துள்ளது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது” என்றனர்.

- 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x