Published : 18 Dec 2018 08:04 AM
Last Updated : 18 Dec 2018 08:04 AM

முதல்வர் பழனிசாமியுடன் விஜயபாஸ்கர் சந்திப்பு: சிபிஐ விசாரணை குறித்து விளக்கம்

குட்கா வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தொடர்ந்து 2 நாட்களாக ஆஜரான நிலையில், அதுதொடர்பாக முதல்வர் கே.பழனிசாமியை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று சந்தித்து விளக்கம் அளித்தார்.

குட்கா ஊழல் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த அக்டோபர் 6-ம் தேதி தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்டோர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். குட்கா நிறுவன உரிமையாளர்கள் மாதவ ராவ், சீனிவாச ராவ், உமா சங்கர் குப்தா உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில், சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணையை தொடங்கியுள்ள சிபிஐ அதிகாரிகள், கடந்த 2 தினங்களாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக மேலும் சில முக்கியப் பிரமுகர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முதல்வர் பழனி சாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று காலை சந்தித்துப் பேசினார். அப்போது சிபிஐ விசாரணை தொடர்பாக விளக்கம் அளித்த தாக கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத் தில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜராக உள்ளார். இது தொடர்பாகவும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x