Published : 22 Dec 2018 09:55 AM
Last Updated : 22 Dec 2018 09:55 AM

அனைத்து கம்ப்யூட்டர்களையும் கண்காணிக்க அதிகாரம்; சாதக, பாதகம் உள்ளதாக சட்ட வல்லுநர்கள் கருத்து

அனைத்து கம்ப்யூட்டர்களையும் கண்காணிக்க 10 புலனாய்வு அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கியது தொடர்பாக சட்டவல்லுநர்கள் கருத்து தெரிவித்துள் ளனர்.

இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள எந்தவொரு கம்ப்யூட்டரிலும் உருவாக்கப்பட்ட  அல்லது அனுப்பி வைக்கப்பட்ட அல்லதுபெறப்பட்ட அல்லது சேகரிக்கப்பட்ட தரவு விவரங்களை இடைமறித்து கண்காணிக்கவும், சங்கேதவார்த்தைகளைப் பிரித்து அறிந்து குறியீடுகளை அழிக்கவும் மத்தியஉள்துறை அமைச்சகம் 10 புலனாய்வு அமைப்புகளுக்கு அதிகாரமளித்து ஆணை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக சட்ட வல்லுநர்கள் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

சென்னை உயர் நீதிமன்ற உதவி சொலிசிட்டர் ஜெனரல் வழக்கறி ஞர் ஜி.கார்த்திக்கேயன்: நாட்டின் பாதுகாப்பு விஷயங்களுக்காக மத்திய அரசு எடுத்துள்ள நல்ல முயற்சியாகத்தான் இதைப் பார்க்க வேண்டும். தனி மனித நலனா அல்லது பொதுநலனா என பார்த்தால் பொதுநலன் தான் முக்கியம். இதன் மூலம் நாட்டில் உலவும் தேச விரோத சக்திகளை அடியோடு அழிக்கலாம்.  இன்னும் சொல்லப்போனால் வங்கி கணக்குகளையும் கொஞ்சம் ஆழமாக ஆராய முடியும். வெளிநாடுகளில் பணம் பதுக்குவதையும் தடுக்கமுடியும். இந்தியாவில் நிலையற்றதன்மையை உண்டாக்க அண்டைநாடுகள் முயற்சித்து வரும் சூழலில் இதுபோன்ற நடவடிக்கைகள் நிச்சயமாக பொதுமக்களுக்கு இடையூறாக இருக்காது. தவறு செய்பவர்களுக்கு இந்த நடவடிக்கை நிச்சயமாக நெருக்கடியாக இருக்கும்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன்: பொதுவாக எல்லா தகவல் தொழில்நுட்ப சாதனங்களுமே அரசாங்கத்தின் கண்காணிப்பில் தான் இருந்துவருகிறது. நம்முடைய ரகசியங்களை கூகுள் வைத்திருக்கும்போது, மத்திய அரசாங்கம் வைத்திருப்பதில் தவறு என்ன இருக்கிறது. குறிப்பிட்ட நாட்களுக்கு எல்லா தகவல்களுமே பத்திரப்படுத்தப்படும். ஆனால் அந்த தகவல்களைச் சாட்சியமாக பயன்படுத்துவதற்குத்தான் தடை உள்ளது. ஆனால் கம்ப்யூட்டர்களை கண்காணிப்போம் எனக் கூறுவதால் மக்கள் மாற்று வழிகளை சிந்திக்கஆரம்பித்து விட்டால் அரசுக்குத்தான் சிக்கல் ஏற்படும். இதுபோன்ற அச்ச உணர்வு  பகிரங்கமான தகவல் பரிமாற்றத்தை தடுத்துவிடும். ஏற்கெனவே அனைத்து தகவல் பரிமாற்றங்களும் அரசாங்கத்தால் கண்காணிக்கப்பட்டு வரும் போது

இந்த உத்தரவு அரைவேக்காட்டுத்தனமானது. முதலில் இந்த 10 அமைப்புகளும் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக செயல்படாமல் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் துணைத் தலைவரும், அகில இந்திய மகளிர்காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளருமான ஆர்.சுதா: இந்தியா ஒரு ஜனநாயக நாடா அல்லது சர்வாதிகார நாடா என்ற கேள்வி எழுகிறது. சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளின் அச்சுறுத்தல் உள்ளது. இதனால் இந்திய ஒருமைப்பாட்டிற்கே ஆபத்து  ஏற்படலாம் என்பது நியாயமான சந்தேகம். ஆனால் பாஜக அரசு நாட்டின் பாதுகாப்பு விஷயங்களில் பல்வேறு குளறுபடிகளை வைத்துக்கொண்டு தற்போது பாதுகாப்பு என்ற பெயரில் தனிமனித உரிமை, தனி மனித சுதந்திரத்தில் தலையீடு செய்வது சரியல்ல. ஹேக்கர்கள் போன்ற நவீன திருடர்களைக் கண்டுபிடித்து தண்டிப்பதற்காகவே தகவல் தொழில்நுட்ப சட்டம் கொண்டு வரப்பட்டது.

தற்போது அரசாங்கமே சட்ட ரீதியாக தகவல்களைத் திருடும் என்பது எந்த வகையில் நியாயம். நினைத்துப் பார்க்கமுடியாத பயங்கரமாக உள்ளது. சினிமா, நீதித்துறை, பெண்களின் அந்தரங்கம், பத்திரிகை, தேர்தல், அரசியல்கட்சிகளின் அனைத்து விஷயங்களையும் எளிதாக கண்காணித்து இடைமறிக்க முடியும் என்பது மீண்டும் ஆங்கிலேயர்களின் காலத்தைத்தான் காட்டுகிறது.

எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி அரசுக்கு எதிராக யார் கருத்துப்பதிவு செய்தாலோ அல்லது தகவல்களைச் சேகரித்தாலோ அவர்களை தொந்தரவு செய்யலாம் என்பது இன்னும்மொரு ஜனநாயகப் படுகொலையாகத்தான் பார்க்க முடியும். டிஜிட்டல்மயம் எனக்கூறி மக்களை ஏமாற்றியது இதற்காகத்தானா என்ற சந்தேகமும் எழுகிறது என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x