

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் காலமானார். அவருக்கு வயது 77.
நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராக இருந்தவர் க.ப. அறவாணன். இவர் நெல்லை மாவட்டத்தின் கடலங்குடியை சேர்ந்தவர். இந்திய பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றத்தின் முன்னாள் செயலாளரும் மற்றும் பொருளாளரும் இஸ்லாமிய தமிழிலக்கிய கழகத்தின் வாழ்நாள் உறுப்பினரும் ஆவார்.
தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத்திட்ட குழு உறுப்பினரான இவர் சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு முதலான துறைகளில் 56 நூல்களை வெளியிட்டுள்ளார். தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்றுள்ளார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், இன்று சென்னை அமைந்தகரையில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தமிழ் எழுத்தாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.