

தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது வலுவடைய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம்:
"இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும்.
இதன் காரணமாக தெற்கு வங்கக்கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், தென்கிழக்கு வங்கக்கடல்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு மீனவர்கள் மூன்று நாட்களுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. சென்னையை பொருத்தவரையில் வறண்ட வானிலை காணப்படும்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.