Published : 17 Dec 2018 11:57 AM
Last Updated : 17 Dec 2018 11:57 AM

100 நாள் முடிந்தது; ஆளுநர் மாளிகைக்கு புரிவது எப்போது? - அற்புதம் அம்மாள் வேதனை

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக ஆளுநரே முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்து விட்டதாக, பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள் தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட்பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பெரும் 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.

இவர்கள் அனைவருக்குமே விசாரணை நீதிமன்றத்தில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் பல்வேறு காலக்கட்டங்களில் ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தது.

அதுமட்டுமின்றி, அவர்கள் அனைவரும் ஆயுள் தண்டனைக் காலமான 14 ஆண்டுகளை ஏற்கெனவே சிறைகளில் கழித்துவிட்டதால் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவுகளின்படி அவர்களை விடுதலை செய்யலாம் என்று கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதனடிப்படையில் அவர்களை விடுவிப்பதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அவர்களை விடுதலை செய்ய இயலவில்லை.

7 தமிழர்களின் விடுதலை கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக தாமதமாகி வந்த நிலையில், இந்திய அரசியலமைப்புசட்டத்தின் 161-வது பிரிவின்படி அவர்களை விடுவிப்பது குறித்து மாநில ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் செப்டம்பர் 9 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூடி 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

7 தமிழர்களின் நடத்தை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய கோப்புகள் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், இன்று வரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இதுகுறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதற்கு, திமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக ஆளுநரே முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இன்றுடன் (திங்கள்கிழமை) 100 நாட்கள் நிறைவடைந்து விட்டன என, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "இன்றுடன் 100 நாள் முடிந்தது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது... அமைச்சரவை பரிந்துரைத்தது... ஆளுநர் மவுனம் ஏன் ?? நிரபராதியின் தாய் மனதை மக்கள் புரிந்துகொண்டார்கள். ஆளுநர் மாளிகைக்கு புரிவதெப்போ ??நீதி வெல்வதெப்போ...?" என பதிவிட்டுள்ளார்.

மேலும், பேரறிவாளன் பரோலில் வெளிவந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், "விடுப்பில் வந்தான் 'மகிழ்ந்தோம்' விடைபெற்று சென்றான் 'உடைந்தோம்'வழியும் கண்ணீர் விழிகளோடு காத்திருக்கிறோம்அவன் 'விடுதலைக்கு!" என அற்புதம் அம்மாள் பதிவிட்டுள்ளார்.

— Arputham Ammal (@AmmalArputham) December 17, 2018

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x