Published : 10 Dec 2018 08:32 AM
Last Updated : 10 Dec 2018 08:32 AM
வங்கக் கடலில் உருவாகவுள்ள புயல் சின்னம் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாற வாய்ப்புள்ளதாக பல்வேறு தனியார் வானிலை ஆய்வு நிறுவனங்கள் கணித்து வருகின்றன. அது வட தமிழக கடலோரப் பகுதியில் கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அரசு நிர்வாகங்களும் புயலை எதிர்கொள்ள தங்களை தயார்படுத்தி வருகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் நிலநடுக்கோட்டு பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடித்து வருகிறது. இதன் தாக்கத்தால், அதே பகுதியில் திங்கள்கிழமை (இன்று) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுப்பெறக்கூடும். அதனால் அதன் நகர்வை, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
இதன் தாக்கம் தமிழக கட லோரப் பகுதியில் இல்லாததால், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும். சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT