Published : 24 Dec 2018 08:36 AM
Last Updated : 24 Dec 2018 08:36 AM

ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததில் என்ன தவறு? - திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

நாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக ராகுல் காந்தியை முன்மொழிந்ததில் என்ன தவறு இருக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

செஞ்சியில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மஸ்தான் இல்ல திருமண விழாவில் பங்கேற்று அவர் பேசியதாவது: சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக ப்ளக்ஸ் பேனர்களை வைக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து திமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டேன். ஆனால் ஆட்சிக்கு வர முடியாத ஒரு கட்சியின் தலைவர், ஆளும் கட்சியை குறை கூறும்போது ஆண்ட கட்சியையும் சேர்த்து குறை சொல்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

நாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக, இந்திய அளவில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன் மொழிந்ததில் என்ன தவறு இருக்கிறது? ராகுலை வேண்டாம் என எந்தத் தலைவரும் கூறவில்லையே. தேர்தலுக்குப் பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று தானே கூறி வருகின்றனர். முன்பு இந்திராகாந்தி அம்மையாரை பார்த்து, நேருவின் மகளே வருக, நல்லாட்சி தருக என திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி கூறினார். தற்போது ராகுலே வருக, நல்லாட்சி தருக என நாங்கள் சொல்லாமல் யார் சொல்வார்கள்?

ஆறுதல் கூறாததால் வேதனை

தமிழகத்தில் பாஜக தலை தூக்காமல் இருப்பதைப்போல் இந்திய அளவிலும் பாஜகவை தலைதூக்காமல் தடுக்க வேண்டும்.

வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் ஏதேனும் துயர சம்பவங்கள் ஏற்பட்டால் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவிக்கும் பிரதமர் மோடி, தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வராதது ஏன்? வரவில்லை எனில் அனுதாபமோ, ஆறுதலோ தெரிவித்தாரா? அதனால் தான் பிரதமரை சேடிஸ்ட் என்று கூறினேன். மோடியை நான் தனிப்பட்ட முறையில் குறை கூறவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறாதது வேதனை அளிக்கிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்தி நாளேட்டில் வெளியாகியிருக்கிறது. அதில் இறந்தவர்களின் தலை, மார்பு மற்றும் பின்புறம் என குறி வைத்து தாக்கியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அரசோ தற்காப்புக்காக சுட்டதாக சொல்கிறது. தற்காப்புக்காக சுட்டவர்கள் குறிபார்த்தா சுடுவார்கள்? அதனால் திமுக சார்பில் சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தினோம். நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழக சட்டப்பேரவை தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x