Published : 30 Dec 2018 08:12 AM
Last Updated : 30 Dec 2018 08:12 AM
2018-ம் ஆண்டில் மத்திய அரசின் நிதி கிடைக்காத நிலையிலும் தனது தலைமையிலான அரசு பல சாதனைகளை செய்திருப்பதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''புதுச்சேரி அரசை பொறுத்த வரை 2018-ம் ஆண்டில் மத்திய அரசில் இருந்து கிடைக்க வேண்டிய நிதி கிடைக்காவிட்டாலும், திட்டங் களை நிறைவேற்றுவதற்கு பல முட்டுக்கட்டைகளும், சோதனை களும் இருந்து வந்தாலும் காங்கிரஸ்- திமுக கூட்டணி ஆட்சி யில் நானும், அமைச்சர்களும் பல சாதனைகளை செய்துள்ளோம். மத்திய அரசின் 26 சதவீத நிதியுடன், மாநில வருவாயை பெருக்கி இந்த சாதனைகளை செய்துள்ளோம்.
2019-ல் மாற்றம் வரும். மத்திய அரசின் நிதி கிடைக்கும் நிலை உருவாகும். மாநில அரசுக்கான தடைகள் நீங்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
சபாநாயகர் வைத்திலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி ஆகியோர் முதல்வர்களாக இருந்த போதும் புதுச்சேரியில் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. பொங்கல், 'தமிழர்களின் திருநாள்' என்பதால் அதை மகிழ்ச்சியோடு கொண்டாட பொங்கல் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஆட்சியிலும் கடந்தாண்டு அவை வழங்கப்பட்டன.
அதுபோல் இந்த ஆண்டும் பொங்கல் பொருட்களை வழங்குவது தொடர்பான கோப்பை ஆளுநருக்கு அனுப்பினேன். அவர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு மட்டும் பொங்கல் பொருட்களை வழங்க வேண்டும் என்றும், அதுவும் பணமாக கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து கோப்பை திருப்பி அனுப்பியுள்ளார். இதை, காங்கிரஸ் கட்சி ஆண்டு விழாவில் (நேற்று முன்தினம்) தெரிவித்தேன்.
உடனே ஆளுநர், 'நான் பொங்கல் பொருட்கள் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை' என்று கூறியுள்ளார். இதனால் மீண்டும் அனைவருக்கும் பொங்கல் பொருட்கள் வழங்கும் கோப்பை அனுப்பியுள்ளேன். என்ன முடிவு எடுத்து அனுப்பிகிறாரோ, அதை பின்னர் தெரிவிக்கிறேன்'' என்றார்.
விதிகளை மீறும் ஆளுநர்
''புதுச்சேரியில் தலைமை செயலகம் மற்றும் சபாநாயகர் அலுவலக செயலகம் என இரண்டுதான் உள்ளது. அரசின் ஒப்புதல் இன்றி ஆளுநர் தனது அலுவலகத்தை 'செயலகம்' என மாற்றியிருக்கிறார். இது விதிகளை மீறிய செயல்.
தன்னிச்சையாகவோ, வாய்மொழியாகவோ, எழுத்து பூர்வமாகவோ அதிகாரிகளுக்கு உத்தரவிடவும், அரசு அலுவ லகங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளவும் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரமில்லை. தொடர்ந்து வலியுறுத்தியும், கடிதம் எழுதியும் அலுவலகங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதனால் நான் நிலையாணை மூலம் ஆளுநரின் எழுத்து மற்றும் வாய்மொழி மூலமான உத்தரவுகளுக்கு கோப்பு அனுப்பி அங்கீகாரம் பெற வேண்டும் என்று கூறியுள்ளேன்.
ஆளுநர் அலுவலகம் தேர்வு மையமாக மாற்றப்பட்டுள்ளது. சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு எழுத்து தேர்வை ஆளுநர் நடத்தியுள்ளார். பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியரைப் போல் ஆளுநர் தேர்வு நடத்துவதை இப்போதுதான் பார்க்கிறேன்'' என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT