

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் மறு குற்றச்சாட்டு பதிவுக்காக சசிகலாவை வரும் 13-ம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜெஜெ டிவிக்கு வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக் உபகரணங் கள் வாங்கியது தொடர்பாக வி.கே.சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது கடந்த 1996-97-ம் ஆண்டுகளில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அந்நியச் செலாவணி மோசடி வழக்குகளைப் பதிவு செய்தனர். இந்த வழக்குகள் மீதான விசாரணை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூலையில் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா மீது காணொலி காட்சி மூலமாக குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்கான ஆவணங் களில் அவர் கையெழுத்திட வில்லை. இதனால் மறு குற்றச் சாட்டு பதிவுக்காக சசிகலாவை வரும் 13-ம் தேதி நேரில் ஆஜர் படுத்த சிறைத்துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக சசிகலா சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமார் முறையீடு செய்தார். அப் போது சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அதையடுத்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ‘‘அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யப்படுகிறது. தேவைப் பட்டால் வழக்கு விசாரணைக்காக அவரை காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தலாம். இந்த வழக்கை 4 மாதங்களில் எழும்பூர் நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.