Published : 11 Dec 2018 04:12 PM
Last Updated : 11 Dec 2018 04:12 PM

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின்; பாஜக ஆட்சியை ஒழிக்க திராவிடமே வழிகாட்டி: கி.வீரமணி பெருமிதம்

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொண்ட நிலையில், பாஜக ஆட்சியை ஒழிக்க திராவிடம் வழிகாட்டியாக இருக்கிறது என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "பாஜக அரசியல் போர்வையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆணைப்படி பிரதமர் மோடி தலைமையிலான  பாசிச ஆட்சியை பதவியிலிருந்து விரட்டிட, ஓர் அம்சத் திட்டமாக எதிர்க்கட்சிகள் அனைவரும் காங்கிரஸ் தலைமையில் திமுக, இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 21 எதிர்க்கட்சிகள் ஓர் அணியாக நேற்று (திங்கள்கிழமை) டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் இணைந்திருப்பது மிகவும் தெம்பூட்டுவதாகவும், பாஜக ஆட்சி என்னும் பாசிசத்திலிருந்து ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் அரிய பொதுநோக்கத்துடன் இணைந்து ஒரே மேடையைக் கட்டியுள்ளது, ஆர்எஸ்எஸ் - பாஜகவினருக்கு வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிளவு

ஏற்கெனவே பாஜக தலைமையில் 2014 இல் அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணி என்ற கூட்டணியிலிருந்த பல கட்சிகள், முதலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியதும், அது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்தது.

21 கட்சிகள் சரியான ஒருங்கிணைப்பு

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி காலத்தில், கூட்டணியில் கொடுக்கப்பட்ட அதே முக்கியத்துவம் கலந்த மரியாதையை திமுகவின் புதிய தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம், அகில இந்திய அரசியலிலும் திமுக ஒரு இன்றியமையாத கட்சி என்பதற்கான அங்கீகார முத்திரையே ஆகும்.

பிரதமர் மோடி - அமித்ஷா எதிர்க்கட்சியினரின் ஒற்றுமையைக் குலைக்க எல்லாவித 'சாம - பேத - தான - தண்ட' முயற்சிகளையும், வித்தைகளையும் செய்து பார்த்தது. ஆனால், இந்த ஒருங்கிணைந்த 21 கட்சிகள் அணி - பாஜகவை, ஆர்எஸ்எஸ்-ஐ மீண்டும் 2019 இல் ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்ற பொது நோக்கில், டெல்லியில் கூடி அருமையான ஒரு ஆக்கபூர்வ தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது; ஜனநாயகத்தினைப் புதைக்க ஆளும் வர்க்கம் தோண்டும் குழியில், குழிதோண்டியவர்களையே விழ வைக்கும் என்பதற்கான முதல் வெற்றி மணியோசையே இந்த ஒருங்கிணைப்பாகும்.

திமுக தலைவரின் செறிவான கருத்துரை

அக்கூட்டத்தில் திமுக சார்பாக அருமையான மையக் கருத்தை மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்திருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக, அரசியலுக்கு அப்பாற்பட்டு கட்சி பேதங்களை மறந்து நமக்குள் இருக்கக்கூடிய சிறு சிறு பிரச்சினைகள், மனஸ்தாபங்கள் எதுவாக இருந்தாலும், அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, மத்தியிலே மதவெறி பிடித்திருக்கக் கூடிய ஒரு ஆட்சி; மோடி தலைமையில் நடந்துகொண்டிருப்பதை நாம் உணர்ந்து பார்த்து அந்த ஆட்சியை அப்புறப்படுத்துவதற்கான முயற்சியில் முழுமையாக ஒரு மெகா கூட்டணி அமைத்து நாம் போராடவேண்டும் என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.

கருணாநிதி மறையவில்லை; அவரால் செதுக்கப்பட்டு அரசியல் களத்தில் மு.க.ஸ்டாலின் மூலம் தொடர்கிறார்; திராவிடம் அனைத்திந்தியாவிற்கும் - மதவெறித் தீயை மூட்டிவரும் பாசிச நெருப்பை அணைக்க வழிகாட்டியாக இருக்கிறது என்பதை எண்ணி திராவிடர் கழகம் எல்லையற்ற மகிழ்ச்சியைப் பெறுகிறது" என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x