Published : 01 Dec 2018 10:18 AM
Last Updated : 01 Dec 2018 10:18 AM

புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் தென்னை விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

புயல் பாதித்த மாவட்டங்களில் முறிந்து விழுந்த தென்னை மரங்கள் மற்றும் தென்னை மர விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயி கலைச்செல்வன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கஜா’ புயல் பாதிப்பு டெல்டா மாவட்டங்களை சின்னாபின்னமாக்கி விட்டு சென்றுள்ளது. இதன் பாதிப்பு உக்கிரமானது. டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தென்னை மரங்கள்தான் அதிகப்படியாக கைகொடுத்து வருகிறது.

ஒவ்வொரு விவசாயிக்கும் அதிகப்படியான தென்னை மரங்கள் உள்ளன. இவை அனைத்துமே பல ஆண்டு உழைப்பு. ஆனால் ‘கஜா’ புயலால் இந்த தென்னை மரங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக பறிகொடுத்து நிர்கதியாகி நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம்.

இந்த பாதிப்பில் இருந்து மீள இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதே தெரியவில்லை. தற்போது தென்னை விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.2 லட்சத்து 64 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் ஒவ்வொரு தென்னை விவசாயிக்கும் ஒரு ஹெக்டேருக்கு ரூ.35 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சூழலில் ‘கஜா’ புயல் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள தென்னை மரங்களை மறுமதிப்பீடு செய்து தென்னை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், பி.ராஜ மாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆறுமுகம், ‘‘புயலால் டெல்டா மாவட்டங்களில் தென்னை மரங் களை இழந்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை தான் அதிகம். ஆனால் தென்னை மரங்களுக் கான இழப்பீட்டினை அரசு முறையாக ஆய்வு செய்யாமல் அறிவித்துள்ளது. எனவே மறுமதிப்பீடு செய்ய உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘புயல் பாதிப்பு காரணமாக டெல்டா மாவட்டங்களில் தென்னை மர விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. இந்த சூழலில் அவர்கள் பெரும் நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர்.

எனவே அந்த மாவட்டங்களில் முறிந்து விழுந்த தென்னை மரங்கள் மற்றும் தென்னை மர விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’ என தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 3-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x