Published : 20 Dec 2018 12:06 PM
Last Updated : 20 Dec 2018 12:06 PM
டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பணி நியமனத்தை சட்ட விரோதம் என அறிவிக்கக்கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள், முன்னாள் தலைமை செயலர், சசிகலா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கதிரேசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "குட்கா முறைகேடு தொடர்பான ஆவணங்களை திட்டமிட்டு மறைத்து டி.கே.ராஜேந்திரன் பதவி நீட்டிப்பு பெற்றுள்ளார். கடந்த ஆண்டு இதே போன்ற வழக்கு விசாரணைக்கு வந்தபோது, டி.கே.ராஜேந்திரன் மீதான லஞ்ச புகார் குறித்த வருமான வரித்துறையின் கடிதம், கோப்புகளை ஆராய்ந்தபோது கிடைக்கவில்லை என தமிழக தலைமை செயலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறு மறைக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் 2017 நவம்பரில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில், சசிகலாவின் அறையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ராஜேந்திரனின் நலன் கருதியே, அந்த ஆவணங்கள் மறைக்கப்பட்டுள்ளது.
ஆகவே, டி.கே.ராஜேந்திரனின் பணி நீட்டிப்பு நியமனத்தை சட்டவிரோதம் என அறிவித்து உத்தரவிட வேண்டும். குட்கா முறைகேடு தொடர்பாக சிபிஐயின் சிறப்பு புலனாய்வு பிரிவு அமைத்து, நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரிக்க உத்தரவிட வேண்டும். மேலும், 2013 தமிழ்நாடு காவலர் சட்ட விதிப்படி புதிதாக டிஜிபியை நியமிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், காணாமல் போனதாக கூறப்பட்ட ஆவணங்கள் அனைத்தும், எந்த பொறுப்பிலும், பதவியிலும் இல்லாத சசிகலாவின் அறையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வருமான வரி புலனாய்வுத்துறை இயக்குநரே அறிக்கை தாக்கல் செய்துள்ளார் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், மத்திய, மாநில அரசுகள், சசிகலா, முன்னாள் தலைமை செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
காணாமல் போனதாக கூறப்பட்ட ஆவணங்கள் சசிகலாவின் அறையிலிருந்து எடுக்கப்பட்டதாக மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT