Published : 24 Dec 2018 09:24 AM
Last Updated : 24 Dec 2018 09:24 AM

சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் அடிக்கடி ரத்து: மாற்று ஏற்பாடுகள் செய்யாததால் பயணிகள் அவதி

சென்னை ரயில் கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக புறநகர் மின்சார ரயில்கள் சேவை அடிக்கடி ரத்து செய்யப் படுகின்றன. ஆனால், மாற்று ஏற்பாடாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது இல்லை. கூடுதல் மாநகரப் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்படுவது இல்லை என்று பயணிகள் புகார் கூறுகின்ற னர்.

சென்னை ரயில்வே கோட்டத் தில் தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில் தினமும் மொத்தம் 670 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் 602 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

ஆனால், பராமரிப்பு பணிகளின் காரணமாக சனி, ஞாயிறுகளில் மின்சார ரயில்களின் சேவையை ரத்து செய்வது வாடிக்கையாக இருக்கிறது.

இதற்கிடையே, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் மற்றும் பட்டாபி ராம் ஈ டெப்போவில் இருந்து நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 3 மணி வரை இரு பக்கமும் அனைத்து புறநகர் ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. அதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்லும் அனைத்து புறநகர் ரயில்களும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ரத்து செய்யப்பட்டன.

இருப்பினும், பயணிகளின் வசதிக்காக சென்ட்ரலில் இருந்து ஆவடி வரை அரை மணி நேரத்துக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படும். சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் செல்லும் அனைத்து புறநகர் ரயில்களும் ஆவடியில் நிறுத்தப்பட்டு, ஆவடியில் இருந்து சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரயில்களாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவிக்கப்பட்டபடி, சிறப்பு ரயில் களும் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர்.

இதுதொடர்பாக திருநின்றவூர் ரயில் பயணிகள் பொதுநலச் சங்கத்தின் செயலாளர் எஸ்.முருகையன் கூறியதாவது:

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்களின் சேவை அடிக்கடி நிறுத்தப்படுகிறது. பராமரிப்பு பணி மற்றும் ரயில் சேவை ரத்து போன்ற தகவல்களை ஒரு வாரத்துக்கு முன்பே அறிவிக்க வேண்டும். பெரிய அளவில் சேவையில் மாற்றம் என்றால், மாநகர பேருந்துகள் கூடுதலாக இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பள்ளி அரையாண்டு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் காரணமாக சென்னையில் இருந்து ஏராளமானோர் வெளியூர் செல்கின்றனர்.

இந்த சூழலில், சிறப்பு மின்சார ரயில்கள்கூட இயக்கப்படவில்லை. இனியாவது, மின்சார ரயில்கள் அதிக அளவில் ரத்து செய்யும்போது, அந்த நாட்களில் கூடுதலாக மாநகர பேருந்துகளை இயக்குமாறு மாநகர போக்குவரத்து கழகத்திடம் தெற்கு ரயில்வே முறைப்படி தகவல் கொடுத்தால், மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x