

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படித்து முடித்த மாணவர்களுக்கும், படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் வழிகாட்ட முன்னாள் மாணவர்கள் குழுக்களை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தக் குழுக்களின் மூலம், மேற்படிப்பு, வேலை வாய்ப்புகள் போன்ற விஷயங்களில் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.
இந்த குழுக்களில் உறுப்பினராவதற்கு, முன்னாள் மாணவர்கள் தங்களது தகவல்களை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதியையும் மாநராட்சி தொடங்கியுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்ய இயலாத மாணவர்கள் ரிப்பன் வளாகத்தில் கல்வித் துறையில் விநியோகிக்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “மாநகராட்சி மாணவர்கள் ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பதாலும், முதல் தலைமுறை மாணவர்கள் என்பதாலும் அவர்களுக்கு மாநகராட்சியின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. ஏற்கெனவே மாநகராட்சிப் பள்ளிகளில் படித்து முடித்து வேலையில் இருப்பவர்கள் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள். அது தவிர துறை வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களை அழைத்தும் யோசனைகள் வழங்கப்படும்” என்றார்.