Published : 30 Dec 2018 09:58 AM
Last Updated : 30 Dec 2018 09:58 AM

கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய விவகாரம்: ரத்த தானம் வழங்கி தற்கொலைக்கு முயன்ற இளைஞர் உயிரிழப்பு

சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில், ரத்தம் அளித்த இளைஞர் தற்கொலை முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில் அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

சாத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கடந்த மாதம் பரிசோதனைக்காகச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணிப் பெண்ணை சோதித்த அரசு மருத்துவர்கள் அவருக்கு ரத்தக் குறைபாடு உள்ளதாக கண்டறிந்தனர்.

அவருக்கு ரத்தம் ஏற்றுவதற்காக சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து ரத்தத்தைப் பெற்று அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது.

சில நாட்கள் கழித்து அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடல் நிலையில் திடீரென பாதிப்பு ஏற்பட்டதால் அந்த கர்ப்பிணிப் பெண் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது அவரைப் பரிசோதித்தபோது அந்தப் பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர்.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்குக் கடந்த மாதம் ரத்தம் ஏற்றப்பட்டதால் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதாகத் தெரியவந்தது.

சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் அங்குள்ள அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் ரத்த தானம் வழங்கியதும், அவரது ரத்தத்தைப் பரிசோதிக்காமல் அதைச் சேமித்து வைத்து அதைக் கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றியதும் தெரியவந்தது. ரமேஷ் என்கிற 19 வயது இளைஞர் கமுதியைச் சேர்ந்தவர் என்றும் அவர் சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்ததும் தெரியவந்தது.

ரத்த தானம் செய்த இளைஞர், வெளிநாடு செல்வதற்காக, மருத்துவப் பரிசோதனை செய்தபோதுதான், அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவர் நினைத்திருந்தால் இதை மறைத்திருக்கலாம். ஆனால், தனது ரத்தத்தை யாருக்கும் ஏற்றிவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்துடன், சிவகாசி அரசு மருத்துவமனைக்குச் சென்று, தான் பாதிக்கப்பட்ட விவரத்தைத் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்குள் கர்ப்பிணிக்கு அவரது ரத்தம் ஏற்றப்பட்டதை அறிந்து பதறிப் போய் உள்ளார். அந்த விவகாரம் மாவட்ட மருத்துவ அதிகாரிகள், சிவகாசி அரசு மருத்துவமனையில் விசாரித்த பிறகுதான், கர்ப்பிணிக்குஎச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது வெளியே தெரிந்தது.

இந்த விவகாரம் பெரிதானதை அடுத்து ரமேஷ் குறித்து பெரிதாகப் பேசப்பட்டது. போலீஸார், மருத்துவ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். இதனால், கடும் மனஉளைச்சலில் அந்த இளைஞர் இருந்தார்.

இந்நிலையில் தன்னால் ஒரு கர்ப்பிணி பாதிக்கப்பட்டுவிட்டாரே என்று அறிந்த அந்த இளைஞர் மன உளைச்சலால் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x