Published : 31 Aug 2014 10:22 AM
Last Updated : 31 Aug 2014 10:22 AM

வங்கி ஊழியர்களிடம் கத்திமுனையில் ரூ.30 லட்சம் கொள்ளை: அரக்கோணம் அருகே பட்டப்பகலில் துணிகரம்

அரக்கோணம் அருகே இந்தியன் வங்கி ஊழியர்களைத் தாக்கி ரூ.30 லட்சம் பணத்தை கொள்ளை யடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரக்கோணம் அடுத்த மின்னல் கிராமத்தில் இந்தியன் வங்கி கிளை உள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் லோகேஷ் (26), மற்றும் பிரதீப் (40) ஆகியோர், சனிக் கிழமை காலை சாலை கிராமத்தில் உள்ள கரூர் வைஸ்யா வங்கிக்குச் சென்றுள்ளனர். அங்கு, தங்கள் வங்கியில் பரிமாற்றத்துக்கு தேவையான ரூ.30 லட்சம் பணத்தை வாங்கியுள்ளனர்.

பின்னர், பணப் பையுடன் தங்களது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனர். இவர்கள், இருவரும் மின்னல் ஏரிக்கரை அருகே சென்ற போது, பதிவு எண் இல்லாத 3 இருசக்கர வாகனத்தில் வந்தவர் கள் வங்கி ஊழியர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதியுள்ளனர்.

இதில், நிலை தடுமாறி கீழே விழுந்தவர்களை இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கும்பல் கத்தி முனையில் மிரட்டியுள்ளனர். முகமூடி அணிந்திருந்த நான்கு பேரும் வங்கி ஊழியர்களை சரமாரியாக தாக்கிவிட்டு, அவர்கள் வைத்திருந்த பணப் பையை பறித்துக்கொண்டு தப்பினர். காயமடைந்த இருவரும் அருகில் இருந்த மின்னல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்த தகவலின்பேரில், அரக்கோணம் துணைக் காவல் கண்காணிப்பாளர் கண்ணப்பன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அரக்கோணம், சோளிங்கர் பகுதி முழுவதும் உஷார்படுத்தப்பட்டு, கொள்ளையர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x