Published : 12 Nov 2018 11:28 AM
Last Updated : 12 Nov 2018 11:28 AM
தருமபுரி மாவட்டத்தில் பழங்குடி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் சிட்லிங் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பிளஸ் டூ படிக்கும் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். இக்கொடுமை அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த வெறிச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
சில நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த 13 வயது தலித் மாணவி பாலியல் வன்முறைக்குள்ளாகி, தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொடூரம் நிகழ்ந்து முடிந்த சில நாட்களுக்குள்ளாகவே மற்றுமொரு கொடூர நிகழ்வாக சிட்லிங் மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் இது போன்ற கொடூரங்கள், குறிப்பாக பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் பிரிவுகளைச் சேர்ந்த மாணவிகள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இது போன்ற குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுப்பதில் தமிழக அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுகிறது. குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கைகள் எடுக்காததும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அரூர் மாணவியை பாலியில் வல்லுறவுக்கு ஆட்படுத்தி, உயிரிழப்புக்கு உள்ளாக்கிய நபர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT