Published : 03 Nov 2018 12:37 PM
Last Updated : 03 Nov 2018 12:37 PM

டெங்கு- பன்றி காய்ச்சலால் உயிர்ப்பலி அதிகரிப்பு; பதற்றமடைய வேண்டாம் என அமைச்சர் கூறுவது விந்தை: இரா.முத்தரசன்

டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் உயிர்ப்பலி அதிகரிப்பதை தமிழக அரசு போர்க்கால வேகத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் டெங்கு, பன்றி காய்ச்சல் காரணமாக ஒவ்வொரு நாளும் உயிர்ப்பலி அதிகரித்துகொண்டே உள்ளது மிகுந்த கவலையளிக்கின்றது. பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், கர்ப்பிணி பெண்கள் உட்பட தினசரி பலி எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

சென்னை, சேலம், திருவள்ளுர், மதுரை, கடலூர், நெல்லை, திருப்பூர், விழுப்புரம் என அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் எல்லா இடங்களிலும் பரவி, உயிர்களை பலி வாங்கி வரும் செய்திகள் நாள் தவறாமல் நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் முதன்மை செய்திகளாக வருகின்றது.

ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் இத்தகைய நோய்கள் கொசுக்களால் பரவி வருவதை அரசு நன்கறியும். சுகாதாரப் பணிகளை செம்மையாக, காலத்தில் மேற்கொண்டு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அரசு தவறியதால் விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகி வருகின்றன.

சுகாதாரத் துறை அமைச்சர் பொதுமக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம் என கூறுவது விந்தையாக உள்ளது.

தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால வேகத்தில் மேற்கொண்டு, மனித உயிர்களை காக்க, தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x