Published : 28 Nov 2018 03:11 PM
Last Updated : 28 Nov 2018 03:11 PM

சென்னை கட்டிட தீ விபத்து:  மாநகராட்சி ஆணையர் வியாழக்கிழமை ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை வடபழனியில் தீ விபத்துக்குள்ளான  சட்டவிரோதக் கட்டிடம் தொடர்பான வழக்கில் மாநகராட்சி ஆணையர் இன்று (புதன்கிழமை) உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை. நாளை (வியாழக்கிழமை) அவரை நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் சென்னை வடபழனி பெருமாள் கோயில் தெற்கு தெருவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். இந்தக் கட்டிடம் விதிகளை மீறிக் கட்டப்பட்டதாகக் கூறப்படுவதால் இது தொடர்பாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அவரது மனுவில், “விபத்துக்குள்ளான கட்டிடம் சட்ட விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ளது, விதிமுறை மீறல்களை அதிகாரிகள் கண்டுகொள்ளாதது தான் இந்த விபத்திற்குக் காரணம், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், இந்த இழப்பீட்டுத் தொகையை பணியைச் செய்யாத அதிகாரிகளுடைய சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து வழங்க வேண்டும்.

சட்டவிரோத விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்தின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு  நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “சட்டவிரோத கட்டிடத்தின் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா? விபத்தில் பலியான நான்கு பேரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்பட்டதா?” என கேள்வி எழுப்பினர். இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து இந்த வழக்கு மீண்டும் இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேரில் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக மத்திய மண்டல துணை ஆணையர் சுபோத் குமார் நேரில் ஆஜராகி இருந்தார். அப்போது நீதிபதிகள் ஏன் மாநகராட்சி ஆணையர் வரவில்லையா? எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர் வேறு பணி காரணமாக இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியவில்லை, நாளை ஆஜராவதாக தெரிவித்தார்.  இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனை நாளை நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நாளை தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x