Published : 13 Aug 2014 11:01 AM
Last Updated : 13 Aug 2014 11:01 AM

இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிகளுக்கு கலந்தாய்வு: வரும் 18 முதல் 23-ம் தேதி வரை நடக்கிறது

இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளுக்கான அடுத்த கட்ட கலந்தாய்வு வருகிற 18-ம் தேதி தொடங்கி 23 வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

குரூப்-4-ல் அடங்கிய இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) 2013 14-ம் ஆண்டு பதவிகளுக்கான தேர்வு கடந்த 25.08.2013 அன்று நடத்தப்பட்டது. தேர்வு முடிவின்படி இளநிலை உதவியாளர் பணிக்கான 3-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வும், தட்டச்சர் பணிக்கான 2-வது கட்ட கலந்தாய்வும், சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கான முதல் கட்ட கலந்தாய்வும் ஆகஸ்ட் 18 முதல் 23-ம் தேதி வரை சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளன. இது குறித்த விவரம் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றொப்பமிடப்பட்ட சான்றிதழ் நகல்களை கலந்தாய்வுக்கு வரும் போது தவறாமல் கொண்டு வர வேண்டும். மேலும் ஆன்லைனில் விண்ணப்பித்தபோது, 10-ம் வகுப்பு கல்வித் தகுதியை தமிழ்வழி மூலம் படித்ததாக குறிப்பிட்ட விண்ணப்பதாரர்கள் மட்டும் அவர்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடமிருந்து அதற்கான சான்றிதழை பெற்றுவர வேண்டும்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக் கப்படும் விண்ணப்பதாரர்கள், தகுதிபெறும் பட்சத்தில் மறுதினம் நடைபெறும் கலந்தாய்வுக்கு தர வரிசைப்படி அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு நாளும் கலந்தாய்வு முடிவடைந்ததும் காலிப் பணியிடங்கள் குறித்த தகவலை தேர்வாணைய இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு பரிசீலிக்கப்படும்போது, இருக் கின்ற காலிப் பணியிடங்களைப் பொருத்தே அனுமதிக்கப்படுவர். எனவே, கலந்தாய்வுக்கு அழைக் கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது .

ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் மட்டுமே முன்னாள் ராணுவத்தினராக கருதப்பட்டு அவர்கள் மட்டுமே உரிய ஒதுக்கீட்டில் பணி ஒதுக்கீடு செய்யப்படுவர். மற்றவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x