

கடந்த 2007-ம் ஆண்டு இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்செல்வன் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து 2007 நவ.12 அன்று மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தமிழ் தேசிய இயக்கம் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் சென்னை மன்றோ சிலையிலிருந்து பேரணி நடத்தப்பட்டது.
அப்போது தடையை மீறி பேரணியில் பங்கேற்றதாக வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட 262 பேர் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2009 டிச.11 அன்று எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி வைகோ உள்ளிட்டவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ், இதில் உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக்கூறி வைகோ உள்ளிட்ட 262 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.