Published : 05 Nov 2018 08:16 AM
Last Updated : 05 Nov 2018 08:16 AM

தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை நாளை வலுவடையும்: மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தல்

தமிழகம், புதுச்சேரியில் வட கிழக்கு பருவமழை நாளை வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன், செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில், 6-ம் தேதியை ஒட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை கடக்கக்கூடும். அதன் காரணமாக இந்த நாட்களில் வடகிழக்கு பருவமழை வலுப்பெறும்.

கடல் சீற்றம்

கடல் சீற்றத்துடன் காணப்படும். மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 6, 7 தேதிகளிலும், குமரிக் கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் 7, 8 ஆகிய தேதிகளிலும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். ஆழ்கடலில் மீன் பிடிப்புக்குச் சென்றுள்ள மீனவர்கள், 6-ம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, புறநகர்ப் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பாபநாசத்தில் 15 செ.மீ. மழை

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 15 செ.மீ. பதிவாகியுள்ளது. மணிமுத்தாறு, குன்னூரில் 6, கொடுமுடி, அருப்புக்கோட்டை, சிவகங்கை ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு இயக்குநர் எஸ்.பாலசந்திரன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x