Published : 16 Nov 2018 11:03 AM
Last Updated : 16 Nov 2018 11:03 AM

பெரு மழையில் வெள்ள நீர் வடிவதற்காக கடல் முகத்துவாரத்தை தூர்வாரும் பணி கடலூரில் தீவிரம்

கடலூரில் ஆறுகள் கடலில் கலக்கும் முகத்துவாரத்தை தூர்வாரும் பணியில் பொதுப் பணித் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

‘கஜா' புயலை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழையால் தேங்கும் தண்ணீர் பெரும்பாலும் கெடிலம், தென்பெண்ணையாறுகளில் வடிக்கப்பட்டு கடலில் கலக்கும்.

தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகத்துவாரத்தை தூர்வாரும் பணியில் பொதுப்பணித் துறையினர் கடந்த 2 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

தேவனாம்பட்டினம், தாழங்குடா பகுதிகளில் உள்ள முகத்துவாரத்தை கடலில் இணைக்கும் வகையில் தூர்வாரினர்.

கடலூர் மாவட்டத்தில் 49 மீனவக் கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களிலிருந்து தினமும் சுமார் 4 ஆயிரம் சிறிய, பெரிய அளவிலான படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வது வழக்கம்.

புயல் எச்சரிக்கை காரணமாக கடந்த சில நாட்களாக மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. கடலூர், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று வழக்கத்துக்கு மாறாக கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது.

‘கஜா' புயலையொட்டி பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகுப் போக்குவரத்து நேற்று முன்தினம் முதல் நிறுத்தப்பட்டுள்ளது. வனச் சரகம் சார்பில் பேரிடர் கால மீட்புப் பணிக்காக படகுகளும், போதிய பணியாளர்களும் தயார் நிலையில் இருப்பதாக வனச்சரக அலுவலர் வெங்கடேசன் தெரிவித்தார்.

வாட்ஸ் அப்பில் புகார் தரலாம்

புயல் காரணமாக, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்று (16ம் தேதி) நடைபெற இருந்த அனைத்துத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட பொதுமக்கள் 73057 15721 என்ற வாட்ஸ் அப் எண்ணில் கஜா புயலினால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான பதிவு செய்யலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x