Published : 30 Nov 2018 02:01 PM
Last Updated : 30 Nov 2018 02:01 PM
விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்காத அரசு தேசப்பற்று பற்றி பேசுகிறது என, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.
வேளாண் கடன் தள்ளுபடி , விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்தியா முழுவதும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, நவம்பர் 30 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்லப்போவதாக, அனைத்து இந்திய விவசாயிகள் ஒத்துழைப்பு குழு, சங்கம் ஆகியவை அறிவித்திருந்தன. இந்தக் குழுவில் 207 அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன.
இதற்காக, குஜராத், ஆந்திரப் பிரதேசம், தமிழகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் வியாழக்கிழமை டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கூடினார்கள்.
தமிழகத்தில் இருந்து தேசிய தென்னிந்திய நிதிகள் ஒருங்கிணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையில் ஆயிரயத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியில் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், இந்த பேரணி குறித்து மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழக விவசாயிகள் டெல்லி வீதியில் நிர்வாண போராட்டம் நடத்திய போதே பிரதமர் ஓடி வந்து ஆறுதல் என்னும் ஒற்றைத்துணி கொண்டு மூடி மறைக்காததன் விளைவு இன்று இந்திய அளவில் 5 லட்சம் விவசாயிகள் நிர்வாண ஊர்வலத்தில் வந்து நிற்கின்றது.
விவசாயத்தையும் விவசாயியையும் பாதுகாக்காத அரசு தேசப்பற்று பற்றி பேசுகின்றது" என கனிமொழி பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT