Published : 27 Nov 2018 03:28 PM
Last Updated : 27 Nov 2018 03:28 PM
கோயம்பேடு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருப்பவர் பார்த்திபன் (43). இவருக்கும் சூளைமேட்டில் வசிக்கும் ஜெயந்தி (37) என்பவருக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. வெகுநாட்களாக இந்தத் தொடர்பு நீடித்து வந்துள்ளது. ஜெயந்தி பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். தனது வீட்டில் அவர் பாலியல் தொழில் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஜெயந்தியின் தொழிலுக்கு ஏட்டு பார்த்திபன் உதவி செய்து வந்துள்ளார். ஜெயந்திக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போலீஸாரால் தொல்லை வராமல் வாடிக்கையாளர்களைப் பிடிக்கவும், அவ்வாறு செல்லும் வாடிக்கையாளர்களை ஜெயந்தி ஏமாற்றி, தகராறு செய்யும் வாடிக்கையாளர்களை திடீர் போலீஸ் ரெய்டு போல் வீடு புகுந்து மிரட்டிப் பணம் பறித்து வருவதும் என ஆதரவு கொடுத்து வந்துள்ளார் பார்த்திபன்.
போலீஸ் சீரூடையில் வந்து ஜெயந்தியை எச்சரித்து துரத்திவிடுவது போன்று துரத்திவிட்டு வாடிக்கையாளரை மிரட்டி வழக்குப் போடுவேன், கைது செய்வேன் என பணம் பறித்து வந்துள்ளார். நீண்ட நாட்களாக நடந்துவரும் இந்த விவகாரத்தில் ஏற்கெனவே கோயம்பேடு ஸ்டேஷனிலேயே அவருக்கு இருமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் இருவரும் தங்கள் வேலையை நிறுத்தவில்லை. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு பாடி, தில்லைநகர் பிரதான சாலையில் வசிக்கும் விஸ்வநாதன் என்ற ஒரு வாடிக்கையாளரை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
ஜெயந்தி தனக்கு 1200 ரூபாய் வேண்டும் எனக் கேட்டுள்ளார். தன்னிடம் 900 ரூபாய் மட்டுமே உள்ளது என வாடிக்கையாளர் சொல்ல ஜெயந்தி மறுக்க தகராறு ஏற்பட வழக்கம்போல் போலீஸை கூப்பிடுகிறேன் என பார்த்திபனை ஜெயந்தி தனது செல்போனில் அழைத்துள்ளார்.
அன்று ஸ்டேஷனில் 8-1 ஷிப்ட் முடித்த பார்த்திபன் 2.30 மணி அளவில் ஜெயந்தியின் வீட்டுக்கு வந்து ஜெயந்தியை விரட்டுவதுபோல் விரட்டிவிட்டு அந்த வாடிக்கையாளர் விஸ்வாநாதனிடம் திடீர் ரெய்டு வந்ததுபோல் மிரட்டி அவரிடமிருந்த 900 ரூபாயைப் பறித்துள்ளார். பின்னர் அவரது மோட்டார் சைக்கிளைப் பறித்து வைத்துக்கொண்ட தலைமைக் காவலர் பார்த்திபன் கூடுதல் பணத்தை எடுத்துவர வேண்டும் என ஜெயந்தியுடன் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
தலைமைக் காவலர் பார்த்திபன் சென்றவுடன் மனம் நொந்து என்.எஸ்.கே நகர் பேருந்து நிலையம் அருகே வந்த விஸ்வநாதன் அங்கு நின்றுகொண்டிருந்த ஜெயந்தியைப் பார்த்து தகராறில் ஈடுபட அவருடன் சண்டையிட்ட ஜெயந்தி ‘உன்னை என்ன செய்கிறேன் பார்’ என்று 100-க்கு போன் செய்து தனது கைப்பையைப் பறிக்க முயன்ற நபரைப் பிடித்து வைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.
உடனடியாக் அமைந்தகரை பேட்ரால் போலீஸ் அங்கு சென்று இருவரையும் ஸ்டேஷன் அழைத்து வந்தது. விசாரணையில் விஸ்வநாதன் நடந்ததைக் கூறி போன் செய்தவுடன் போலீஸ் வந்தார். தன்னிடம் உள்ள பணத்தையும், மோட்டார் சைக்கிளையும் பிடுங்கிச் சென்றார் என்று சொல்ல, அதை ஜெயந்தி மறுக்க போலீஸார் ஜெயந்தியின் செல்போனை வாங்கிப் பார்த்தபோது கோயம்பேடு தலைமைக் காவலர் பார்த்திபன் எண் இருந்தது.
போலீஸார் பார்த்திபனை அழைக்க, அவர் நீண்ட நேர மறுப்புக்குப் பின் காவல் நிலையம் வந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தியபோது விஸ்வநாதன் கூறியது உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து கோயம்பேடு தலைமைக் காவலர் பார்த்திபன், பாலியல் தொழில் செய்யும் ஜெயந்தி இருவர் மீதும் அமைந்தகரை போலீஸார் 3(2)(a), 4(1), 5(1)(a) ITP act r/w 323, 384, 506(i) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். சாலையில் தகராறு செய்த விஸ்வநாதன் மீது பிரிவு 75-ன் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
தவறான தொழிலுக்கு உடந்தையாக இருந்து பணி மறந்து, சட்டத்துக்கு புறம்பாகச் செயல்பட்ட தலைமைக் காவலர் பார்த்திபன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT