Published : 30 Nov 2018 02:55 PM
Last Updated : 30 Nov 2018 02:55 PM

மேகேதாது அணை விவகாரம்: புதுச்சேரி சட்டப்பேரவையைக் கூட்ட  சபாநாயகரிடம் திமுக, அதிமுக மனு

மேகேதாது அணை விவகாரத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றும் வகையில் புதுச்சேரி சட்டப்பேரவையைக் கூட்டுமாறு சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் மனு தந்துள்ளனர்.

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி திமுக எம்எல்ஏ சிவா கட்சி நிர்வாகிகளுடன் சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் மனு அளித்தார்.

அதில், "மேகேதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகம் மட்டுமின்றி காவிரியின் கடைமடைப் பகுதியான காரைக்காலுக்கு உரிய நீர் கிடைக்காத நிலை ஏற்படும். ஏற்கெனவே தமிழகம் மற்றும் காரைக்கால் விவசாயிகள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் இந்த நேரத்தில் மத்திய அரசு இதுபோன்ற அனுமதி அளித்துள்ளது வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது.

சட்டத்துக்கு விரோதமாக மேகேதாதுவில் அணை கட்டும் வரைவு அறிக்கைக்கு அளிக்கப்பட்ட மத்திய அரசின் அனுமதியை திரும்பப் பெற, மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் இயற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை உடனடியாக கூட்ட  நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல் அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவர் எம்எல்ஏ அன்பழகனும் சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற சட்டப்பேரவையைக் கூட்ட கடிதம் தந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x