Published : 27 Nov 2018 09:54 AM
Last Updated : 27 Nov 2018 09:54 AM

நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 

நீதிமன்றத்தின் முன் அனுமதி யின்றி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்க வேலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதி மன்றத்தில் நீதிபதிகள் ஆர்.மகா தேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நடந்து வருகிறது. அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் முத்தையா ஸ்தபதி ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நேற்று இதே அமர்வில் நடந்தது. அப்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் ஆஜராகி, முன்ஜாமீ்ன் கோரியுள்ளவர்களில் ஒருவருக்கு எதிராக தீவிரமான குற்றச்சாட்டு உள்ளது. அதற்கான ஆவணங்கள் உள்ளன. ஆனால் அவர் யார் என்பதை இப்போது கூற முடியாது என்றார்.

அப்போது அறநிலையத்துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் ஏ.மகாராஜா, ‘‘இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கடந்த 2004-ம் ஆண்டு நடத்தப்பட்ட கும்பாபிஷேகம் தொடர்பான ஆவணங்கள் கடந்த 2009 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் அழிக்கப்பட்டு விட்டன’’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு, முன்ஜாமீன் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை தள்ளி வைத்தனர்.

அப்போது ஐஜி பொன். மாணிக்கவேல், “நான் வரும் நவ.30 ம் தேதியுடன் பணி ஓய்வு பெறப்போகிறேன். ஆனால், என்னை ஓய்வுபெற விடாமல் சதியில் சிக்க வைக்க வேலைகள் நடக்கின்றன. பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் என்னுடைய அலுவலகத்துக்கு வந்து ஆவணங் களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென கோரினார். ஆனால், நான் மறுத்துவிட்டேன். சிபிசிஐடி போலீஸார் மூலமாக என் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்த திட்டமிட்டு தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். இதன்மூலம் என் கண்ணியத்துக்கும், நேர்மைக்கும் இழுக்கு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிப்பதற்காகவே இந்த சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டு, உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின் அடிப்படையில்தான் ஐஜி பொன்.மாணிக்கவேல் இந்த வழக்குகளை விசாரித்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக இந்த நீதிமன்றத்தின் முன்அனுமதி பெறாமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது’‘ என உத்தரவிட்டு விசாரணையை வரும் நவ.28-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x