Published : 14 Nov 2018 07:02 PM
Last Updated : 14 Nov 2018 07:02 PM

குடும்ப பிரச்சினையில் சகிப்பின்மை: மனைவியை கொன்ற கணவன்; தற்கொலைக்கு முயற்சி

சென்னை சைதாப்பேட்டையில் குடும்பப்பிரச்சினையில் சகித்துக்கொள்ள முடியாத கணவன் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்தார்.

குன்றத்தூரை சேர்ந்தவர் கார்த்திக்(36), இவரது மனைவி சௌமியா(32), இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். கார்த்திக் எல்க்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறார். கார்த்திக் தனது மனைவியிடம் அதிக உரிமையுடன் இருந்துள்ளார்.

தன்னுடன் மட்டுமே பேசவேண்டும், பழக வேண்டும், எந்நேரமும் தன்னுடனே நேரத்தை செலவிட வேண்டும் என்ற அதீதமான நடவடிக்கை காரணமாக சமீப காலமாக இருவருக்குள்ளும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆறுமாதகாலமாக இருவருக்குமிடையே அதிக அளவில் சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் கணவருடன் கோபித்துக்கொண்டு சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக சௌமியா தாய் வீட்டிலேயே இருந்தார்.

இந்நிலையில் கணவன் கார்த்திக் மனைவியை சமாதானம் செய்யும் முயற்சியில் மாமியாரின் வீட்டிற்கு இன்று காலை வந்துள்ளார். இந்நிலையில் வந்த இடத்தில் மனைவியை அழைக்க மாமனார் மாமியார் முன் இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடும் ஆத்திரத்தில் இருந்த கார்த்திக் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மனைவி சௌமியாவின் கையில் கத்தியால் அறுத்து  கழுத்திலும் அறுத்துள்ளார்.

பின்னர் தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டார். இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். இவை அனைத்தும் சௌமியாவின் பெற்றோர் எதிரிலேயே நடந்தது. வயதானவர்கள் என்பதால் தடுக்க முடியாமல் அவர்கள் இருவரும் அலறினர்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் வீட்டுக்குள் ஓடிவந்து பார்க்கையில் இருவரும் தரையில் ரத்தவெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீஸுக்கும் 108 ஆம்புலன்ஸுக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு போலீஸாரும் வந்தனர், 108 ஆம்புலன்ஸும் வந்தது.

இருவரையும் சோதித்ததில் சௌமியா ரத்தம் அதிகம் வெளியேறியதால் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. ரத்தம் வெளியேறிய நிலையில் மயங்கிக்கிடந்த கார்த்திக்கை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். சம்பவ இடத்திற்கு வந்த சைதாப்பேட்டை போலீஸார் சௌமியாவின் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாதாரண குடும்பப்பிரச்சினையில் சகிப்புத்தன்மை இல்லாமல் மனைவியை கழுத்தறுத்துக் கொன்ற கணவன் தானும் தற்கொலைக்கு முயன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கார்த்திக்கின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.  

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x