Published : 12 Aug 2014 08:55 AM
Last Updated : 12 Aug 2014 08:55 AM

17 வயதை நிறைவு செய்ய ஒரு நாள் குறைந்ததால் எம்.பி.பி.எஸ். படிக்கும் வாய்ப்பை இழந்த மாணவர்கள்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

17 வயதை நிறைவு செய்ய ஒரு நாள், இரண்டு நாள்கள், நான்கு நாள்கள் மட்டும் குறைந்த காரணத்தால் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிக்கும் வாய்ப்பை பல மாணவர்கள் இழந்துள்ளனர்

உயர் நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்த பதில் மனு ஒன்றி லிருந்து இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கீழக் கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் டி.ராமானுஜம். இவர் 12-ம் வகுப்பு தேர்வில் 1101 மதிப்பெண்கள் பெற் றார். எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரு வதற்காக 194.50 கட்-ஆப் மதிப்பெண் பெற்றிருந்தார். எனினும், வரும் டிசம்பர் 31ம் தேதி அவருக்கு 17 வயது நிறைவடையாது என்பதால் அவரது விண்ணப்பத்தை மருத்துவக் கல்வித் துறை அதிகாரி கள் நிராகரித்து விட்டனர்.

இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ராமானுஜம் மனு தாக்கல் செய்தார். 17 வயதை நிறைவு செய்ய தனக்கு 27 நாள்கள் மட்டுமே குறைவதால், சலுகை வழங்கி எம்.பி.பி.எஸ். இடம் ஒதுக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு தொடர்பாக அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக் குழு செயலாளர் டாக்டர் ஆர்.ஜி.சுகுமார் சார்பில் அரசு கூடுதல் வழக்கறிஞர் பி.சஞ்சய்காந்தி பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியுள்ளதாவது:

இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளின்படி எம்.பி.பி.எஸ். சேரும் மாணவர்கள் அந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியன்று 17 வயதை நிறைவு செய்பவர்களாக இருக்க வேண்டும்.

இதே விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு தொடரப்பட்ட வழக்கிலும், மருத்துவ கவுன்சில் நிர்ணயம் செய்துள்ள வயது தகுதியை நிறைவு செய்பவர்கள் மட்டுமே எம்.பி.பி.எஸ். சேர முடியும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆகவே, இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் ராமானுஜம் சேர இயலாது. இவர் மட்டுமல்ல. 17 வயதை நிறைவு செய்ய ஒரு நாள், இரண்டு நாள்கள், 4 நாள்கள் குறைபவர்கள் என 17 வயதை நிறைவு செய்யாத 46 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஆகவே, மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து வழக்கின் விசாரணையை வரும் புதன்கிழமைக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x