வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Updated on
1 min read

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த சில தினங்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்வதற்கான சூழல் ஏற்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் நேற்று கூறியதாவது:

இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு இலங்கை கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது.

மேலும், மாலத்தீவு மற்றும் குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பில்லை. புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடும்படியாக எங்கும் மழை பதிவாகவில்லை. கடந்த அக்டோபர் 1 முதல் நவம்பர் 28-ம் தேதி வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழக்கமாக 344 மி.மீ மழை பெய்திருக்க வேண்டும்.

ஆனால் இதுவரை 303 மிமீ மழைதான் பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 12 சதவீதம் குறைவு. சென்னையில் 619 மிமீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை 321 மிமீ மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பை விட 48 சதவீதம் குறைவு.

இவ்வாறு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in