Published : 18 Nov 2018 11:10 AM
Last Updated : 18 Nov 2018 11:10 AM

ஒசூர் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து: சிகிச்சைக்காகச் சென்ற நோயாளி உட்பட 4 பேர் பரிதாப பலி

ஒசூர் அருகே இன்று அதிகாலை ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மேல் சிகிச்சைக்காகச் சென்ற நோயாளி உட்பட 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்தவர் செல்வம் (43). இவருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக அவரை பெங்களூரு நாராயணா ஹ்ருதயா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உறவினர்கள் முடிவு செய்தனர். திருச்சி அரசு மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெங்களூரு சென்றனர்.

அதிகாலை 4 மணியளவில் சீத்தாராம் மேடு எனும் பகுதியில் சென்றபோது சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் மோதியது.

இதில் ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி செல்வம் (43), அவரது மனைவி காந்திமதி (33), அவர்களது உறவினர் சரவணன் (26) மற்றும் ஆம்புலன்ஸ் உதவியாளர் மதன்குமார் (18) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

ஆம்புலன்ஸை ஓட்டிவந்த ஜெயசூர்யா (23) படுகாயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து ஒசூர் ஹட்கோ போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x