Last Updated : 05 Nov, 2018 09:18 AM

 

Published : 05 Nov 2018 09:18 AM
Last Updated : 05 Nov 2018 09:18 AM

விபத்தில்லா தீபாவளிக்காக தயாராகும் தீயணைப்பு துறை: தயார் நிலையில் 315 நிலையங்கள், 7 ஆயிரம் வீரர்கள்

தீபாவளியன்று தீ விபத்துகளைத் தடுக்க 7 ஆயிரம் வீரர்களுடன் 315 தீயணைப்பு நிலையங்கள் தயாராக உள்ளன.

தீபாவளியையும் தீ விபத்துக்களையும் பிரிக்க முடியாது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியன்று தீ விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய தினங்களில் மழை பெய்ததால் தீ விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்தது. தமிழகம் முழுவதும் தீபாவளி தினத்தன்று 2014-ல் 82 தீ விபத்துக்களும், 2015-ல்88, 2016-ல் 836, 2017-ல் 166 தீ விபத்துக்களும் நடந்துள்ளன. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் அதிக அளவில் தீ விபத்துக்கள் நடக்கின்றன.

மக்கள் நெருக்கம் அதிகமுள்ள சென்னையில் விழிப்புணர்வில்லாமல் பட்டாசுகளை வெடிப்பதே அதிகமான விபத்துக்களுக்கு காரணமாக கூறப்படுகிறது.தீபாவளி தீ விபத்துக்களைத் தடுக்க தீயணைப்பு துறை இப்போதே தயாராகி விட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு தீயணைப்பு துறை இணை இயக்குநர் மு.சாகுல்ஹமீது கூறியதாவது:தீ விபத்து குறித்து அழைப்பு வந்த 20 விநாடிகளுக்குள் வீரர்கள் அனைவரும் வண்டியில் அமர்ந்து தயாராகிவிட வேண்டும்.

2 நிமிடத்தில் நிலையத்தில் இருந்து வண்டி புறப்பட வேண்டும். ஒரு நிமிடத்துக்கு ஒரு கிலோ மீட்டர் என்ற வேகத்தில் செல்ல வேண்டும் என்பது அடிப்படை விதி. ஆனால் நெருக்கடி மிகுந்த இடங்களில் இது சாத்தியமில்லை. இருந்தாலும் முடிந்தவரை விரைவாக சென்று விடுவோம். தமிழகம் முழுவதும் 315 நிலையங்களில் 7 ஆயிரம் வீரர்கள் தீயணைக்கும் பணிக்கு தயார் நிலையில் இருப்பார்கள்.சென்னையில் 39 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. தீபாவளியை முன்னிட்டு விபத்து ஏற்படும் பகுதிகள் என 19 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் தீயணைப்பு வண்டி எப்போதும் நிறுத்தப்பட்டிருக்கும். சென்னை குடிநீர் வாரியத்தில் இருந்து நீர் நிரப்பப்பட்ட 50 டேங்கர் லாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் 700 தீய ணைப்பு வீரர்களும், 82 தீயணைப்பு வாகனங்களும் உள்ளன.சென்னையில் தீ விபத்துக்கள் அதிகமாக நடப்பதால் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 15 தீயணைப்பு வண்டிகளும், 300 வீரர்களும் கூடுதலாக வரவழைக்கப்படுகிறார்கள். தீபாவளி தினத்தன்று தீயணைப்பு வீரர்கள் ஒருவருக்கு கூட விடுமுறை கிடையாது. விடுமுறையில் இருப்பவர் களும் பணிக்கு திரும்பி வர வேண்டும்.ராக்கெட் பட்டாசுகளால்தான் அதிகமான தீ விபத்துக்கள் நடக்கின்றன. இந்த வகையான பட்டாசுகளைத் திறந்த வெளி மைதானங்களில் மட்டுமே வெடிக்க வைக்க வேண்டும். தீவிபத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விளக்க காட்சிகளைப் பள்ளிகளில் நடத்தி வருகிறோம்.

அரசு குறிப்பிட்டுள்ள நேரத் தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். இதனால் பல விபத்துக்களையும் தடுக்க முடியும். தீ விபத்து ஏற்பட்டால் 101,102 ஆகிய எண்களுக்கு உடனே தகவல் கொடுக்கவும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x